பெண்களைக் கடத்தி விற்பனை செய்த குற்றக் கும்பல் கைது
12 Oct,2019
ஸ்லோவாக்கியாவிலிருந்து கிளாஸ்கோவிற்கு பெண்களைக் கடத்தி, விபச்சாரம் மற்றும் மோசடித் திருமணங்களுக்கு கட்டாயப்படுத்திய நான்கு குற்றவாளிகள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
2011 மற்றும் 2017 க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் கடத்தப்பட்ட பெண்களை கோவன்ஹில் (Govanhill) பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்குக் கொண்டுசென்ற இக்குற்றக்கும்பல் அப்பெண்களைக் கொடுமைப்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் ஆர்கைல் வீதியில் (Argyle Street) £10,000 க்கு விற்கப்பட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
வோஜ்ரெக் கோம்பர் (Vojtech Gombar 61), அனில் வாக்லே (Anil Wagle 37), ஜன சன்டோரோவா (Jana Sandorova 28) மற்றும் ரற்ரிஸ்லாவ் ஆடம் (Ratislav Adam 31) ஆகியோர் கைது செய்யப்பட்டு கிளாஸ்கோவில் உள்ள உயர் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டுள்ளனர்.
இக்குற்றவாளிகளுக்கு அடுத்த மாதம் தண்டனை வழங்கப்படவுள்ளது.
பொலிஸாரின் Operation Synapsis என அழைக்கப்படும் ஐந்தாண்டு நடவடிக்கை மூலம் கடத்தல் வளையத்தை உடைத்த பொலிசார் நான்கு குற்றவாளிகளைக் கைதுசெய்தனர்.
மிகவும் வெறுக்கத்தக்க கொடூரமான குற்றங்கள் இவை என்று விசாரணையை வழிநடத்திய பொலிஸ் துப்பறியும் ஆய்வாளர் ஸ்டீவன் மக்மில்லன் தெரிவித்துள்ளார்.
மனிதர்களை ஒரு பொருளாக விற்பது, வாங்குவது என்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது என்று மக்கள் நினைப்பது மிகக் கொடூரமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் மனிதக் கடத்தலை மேற்கொள்கின்ற கும்பல்களைப் பிடிப்பதற்கு யூரோபோல் மற்றும் யூரோஜஸ்ட் போன்ற துறைகளுடன் பிரித்தானியா இணைந்து செயற்படுகின்றது என்றும் ஸ்டீவன் மக்மில்லன் தெரிவித்துள்ளார்.