தடை செய்யப்பட்ட இயக்கத்தில் இருந்த 4 இலங்கையர்கள் பிரிட்டனில் கைது
09 Oct,2019
தடை செய்யப்பட்டுள்ள இயக்கமொன்றின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் நான்கு இலங்கையர்கள் பிரிட்டனின் பயங்கரவாத விசாரணை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேகநபர்கள் லுட்டன் விமான நிலையத்தில் கடந்த சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2000ஆம் ஆண்டு பயங்கரவாத சட்டம் மற்றும் 1984ஆம் ஆண்டு குற்றசாட்சி சட்டம் ஆகியவற்றின் கீழ் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்த சந்தேகநபர்கள் தொடர்பான விசாரணைகளை பிரிட்டன் போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களில் மூன்று ஆண்களும், ஒரு பெண்ணும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
35,39 மற்றும் 41 வயதான ஆண் சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மூன்று சந்தேகநபர்களையும் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருவதாக போலீசார் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட 35 வயதான பெண் சந்தேகநபரை எதிர்வரும் நவம்பர் மாதம் முதலாம் வாரம் வரை பிணையில் விடுவிக்க அந்த நாட்டு நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பிரிட்டனின் 2000ஆம் ஆண்டு பயங்கரவாத சட்டத்தின் 11ஆவது சரத்தின் கீழ் தடை செய்யப்பட்ட இயக்கமொன்றில் அங்கம் வகிப்பது சட்ட விரோதம் என குறிப்பிடப்பட்டுள்ளது.