கூண்டில் இருந்து தப்ப கண்ணாடியை கல்லால் அடித்த புத்திசாலி குரங்கு
02 Sep,2019
சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ஜெங்ஜூ என்ற மிருகக்காட்சி சாலை உள்ளது. இங்கு கண்ணாடி கூண்டுகளுக்குள் வைத்து கேபுசின் வகை குரங்குகள் பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன. அவை செய்யும் வேடிக்கைகளை சுற்றுலாவுக்கு வரும் குழந்தைகள் உள்ளிட்ட பார்வையாளர்கள் ரசித்து, மகிழ்ந்து செல்வர் இவற்றில் கொலம்பிய நாட்டை சேர்ந்த வெள்ளை முகம் கொண்ட கேபுசின் வகை குரங்கொன்று மற்றவற்றில் இருந்து வேறுபட்டு உள்ளது. அது அங்கிருந்த பெரிய அளவிலான கல் ஒன்றை எடுத்து வந்து கண்ணாடியை உடைத்து தப்பி செல்லும் முயற்சியில் ஈடுபட்டது இரு கைகளாலும் கல்லை பிடித்து கொண்டு கண்ணாடி மீது அடித்து நொறுக்குவதை பார்த்த பார்வையாளர்கள் மிரண்டு போய் விட்டனர் குரங்கு அடித்ததில் கண்ணாடி முழுவதும் திடீரென விரிசல் அடைந்தது. இதனால் அச்சமடைந்த குரங்கு அங்கிருந்து உடனே வேறு திசையில் ஓடி விட்டது. இதுபற்றி சுற்றுலாவாசியான வாங் என்பவர் கூறும்பொழுது, குரங்கு கல்லை கூர்மைப்படுத்தி கொண்டிருந்தது. பின்னர் அது கண்ணாடியை உடைக்க தொடங்கியது. கண்ணாடி உடைந்ததும் பயத்தில் ஓடி சென்ற குரங்கு மீண்டும் கண்ணாடி அருகே வந்து கவனித்து. பின்பு மெல்ல அதனை தொட்டது என கூறினார்.
இது மற்ற குரங்குகளை போல் அல்ல என மிருகக்காட்சி சாலையின் ஊழியர் டியான் ஷூலியாவோ கூறினார். அவர், இந்த குரங்கு மற்ற குரங்குகளை போலல்லாது, உணவாக கொடுக்கும் அக்ரூட் பருப்புகளை உடைக்க கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து வைத்திருக்கிறது.
நாங்கள் மற்ற குரங்குகளுக்கு அக்ரூட் பருப்புகளை உணவாக அளிக்கும்போது, அதை கடிக்க மட்டுமே அவற்றுக்கு தெரியும் என கூறினார். இந்த குரங்கு, இதற்கு முன் ஒருபோதும் கண்ணாடியை தாக்கியதில்லை. இதுவே முதல் முறையாகும்.
ஆனால் இது மிக வலிமையான கண்ணாடி. அதனால் அது உடையவில்லை. குரங்கும் வெளியே தப்ப முடியவில்லை. இந்த சம்பவம் நடந்தபின், நாங்கள் எல்லா கற்களையும் மற்றும் அதன் அனைத்து ஆயுதங்களையும் எடுத்து சென்று விட்டோம் என கூறினார். தொடர்ந்து அவர், கண்ணாடி மாற்றப்படும் என்றும் எந்த விலங்குகளும் தப்பி செல்ல முயற்சிக்காத வகையில் ரோந்து பணிகளையும் அதிகரிப்போம் என்றும் கூறினார்