பணம் கொடுத்த வர்த்தகருக்கு நேர்ந்த கதி: புதைக்கப்பட்ட நிலையில் சடலம் மீட்பு
17 Aug,2019
புத்தளம் பகுதியில் வர்த்தகர் ஒருவரை கடத்தி கொலைச் செய்து சடலத்தை புதைத்தமை தொடர்பில் சந்தேகத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் பகுதியில் வர்த்தகர் ஒருவர் கடந்த 11 ஆம் திகதியிலிருந்து காணாமல் போயுள்ளதாக உறவினர்கள் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இந்நிலையில் தொலைப்பேசி அழைப்புகள் மற்றும் சி.சி.ரி.வி காணொளிகள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைககளை குற்றத்தடுப்பு பிரிவினர் முனனெடுத்துள்ளனர்.
இதனடிப்படையிலேயே சந்தேக நபர்கள் இருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், காணாமல் போனதாக குறிப்பிடப்படும் வர்த்தகர் கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் மேலும் தெரியவருவதாவது,
பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரில் ஒருவர் குறித்த வர்த்தகரிடம் வட்டிக்கு கடன் பெற்றுள்ளார்.
மற்றவர் கடன் பெற்றவரின் நண்பராவார். இதன்போது பிரதான சந்தேக நபரின் நண்பரிடம் வாக்கு மூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதன் பின் பொலிசார் விடுவித்துள்ளனர்.
கடந்த 11 ஆம் திகதி பிற்பகல் தனக்கு கிடைக்க வேண்டிய வட்டி பணத்தை அறவிடுவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் சந்தேக நபரின் வீட்டுக்கு வர்த்தகர் சென்றுள்ளார்.
இதன்போது சந்தேக நபருக்கும் வர்த்தகருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் ஏற்பட்ட கைகலப்பின் போது குறித்த வர்த்தகர் உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து சந்தேக நபர் வர்த்தகரின் சடலத்தை புத்தளம் - புழுதிவாசல் பகுதியில் தென்னை தோப்பு ஒன்றில் புதைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர் பொலிஸார் வியாழக்கிழமை புத்தளம் நீதிவான் மற்றும் , மரண பரிசோதகர்களையும் அழைத்துச் சென்று புதைக்கப்பட்டிருந்த வர்த்தகரின் சடலத்தை தோண்டி எடுத்துள்ளனர்.
புத்தளம் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய , ஏ.ஆர்.எம்.சபிஸ் எனப்படும் இரு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
இவர் தென்னை தோட்டமொன்றுக்கு உரிமையாளர் என்பதுடன் வட்டிக்கு கடன் கொடுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.