பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்து ஆட்கடத்தலில் ஈடுபட்டவர் உள்ளிட்ட 4 பேர் கைது!
13 Aug,2019
முல்லைத்தீவில் வைத்து வவுனியாவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை கடத்தி பணம் பெறும் முயற்சியில் ஈடுபட்ட பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் உள்ளிட்ட 4 பேரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 3 பேரை தேடி வருவதாகவும் முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மனைவி கொடுத்த முறைப்பாட்டிற்கு அமைவாக வவுனியாவை சேர்ந்த 42 வயதுடைய ச. நாகேந்திரன் என்ற குடும்பஸ்தர் முல்லைத்தீவில் வைத்து பணம் பறிக்கும் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸில் முறைப்பாடு பதியப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
முல்லைத்தீவு மாவட்ட பொலிஸாரின் நெறிப்படுத்தலில் முல்லைத்தீவு மாவட்ட பெருங் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி ஜ.பி. கங்காநாத் தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர் குழுவினர் விசாரணை நடத்தி தேடுதல் மேற்கொண்டு குற்றவாளிகளை கைது செய்துள்ளார்கள்.
இது தொடர்பில் தெரிய வருவதாவது, கடந்த 01 ஆம் திகதி அன்று வவுனியாவை சேர்ந்த குறித்த குடும்பஸ்தர் ஒருவரை முல்லைத்தீவு பகுதியில், விடுதலைப் புலிகளின் தங்கம் புதைத்து வைக்கப்பட்டுள்ளது.
அதனை தோண்டி எடுக்க வருமாறு அழைத்து சிறிய ரக வாகனம் ஒன்றில் கடத்தி, முள்ளிவாய்க்கால் பகுதியில் வீடு ஒன்றில் அடைத்து வைத்து பின்னர் யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் வீடு ஒன்றில் அடைத்து வைத்து கடத்தப்பட்டவரின் மனைவிக்கு தொலைபேசியில் அச்சுறுத்தல் விட்டு பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்த சம்பவம் தொடர்பில் கடத்தப்பட்டவரின் மனைவி 01 ஆம் திகதி அன்று முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
பிரான்சில் வசித்துவரும் யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் சிவறஞ்சிதன் என்பவரின் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு இந்த ஆட்கடத்தல் பணப்பறிப்பில் ஈடுபட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்தவர்கள், மன்னார், வவுனியாவினை சேர்ந்தவர்களே இவ்வாறான கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளதை தொடர்ந்து, 03 ஆம் திகதி அன்று யாழ்ப்பாணம், சாவகச்சேரி சென்ற முல்லைத்தீவு பெருங்குற்றப்பிரிவு பொலிஸார் கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை கைது செய்து முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி உள்ளார்கள்.
இதன்போது அவர்களை கடந்த 08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் பணித்துள்ளார்.
கடந்த 08 ஆம் திகதி அன்று இந்த வழக்கின் குற்றவாளிகளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 20 ஆம் வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் மூவரை முல்லைத்தீவு பொலிஸார் தேடி வருவதாக தெரிவித்துள்ளனர்.