6 பேரைக் கொன்று 12 பேரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய நபர்: மரணதண்டனை
01 Aug,2019
சீனாவில் 6 பேரை படுகொலை செய்து 10 பெண்கள் மற்றும் இரு சிறுமிகளைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட நபரொருவருக்கு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு உயர் நீதிமன்றம் தெரிவிக்கிறது.
"புன்னகைக்கும் கொலையாளி" என செல்லமாக அழைக்கப்படும் ஸவோ ஸிஹோங் (47 வயது) என்ற மேற்படி நபருக்கு 1996 ஆம் ஆண்டுக்கும் 2005ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் அவரால் மேற்கொள்ளப்பட்ட குற்றச்செயல்களுக்காக 2015ஆம் ஆண்டில் இன்னர் மொங்கோலிய பிராந்திய நீதிமன்றத்தால் மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவர் அநேக படுகொலைகளை தனது கரங்களால் கழுத்தை நெரித்தே மேற்கொண்டுள்ளார். ஒரு படுகொலையை மட் டும் அவர் தனது தொலைபேசிக் கம்பிச் சுருளால் கழுத்தை இறுக்கி மேற்கொண்டிருந்தார்.
1996ஆம் ஆண்டு இன்னர் மொங்கோலிய பிராந்தியத்திலுள்ள ஹொஹ்ஹொட் எனும் இடத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையின் மலசலகூடத்தில் வைத்து பெண்ணொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி படுகொலை செய்தமை உள்ளடங்கலாக தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள ஒரு தொகை குற்றச்சாட்டுகளை ஸவோ ஒப்புக்கொண்டிருந்தார்.
மேற்படி ஆடைத் தொழிற்சாலையில் இடம்பெற்ற படுகொலை தொடர்பில் தவறுத லாக குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஹக்ஜில்து என்ற 18 வயது இளைஞனுக்கு ஏற்கனவே மரணதண்டனை நிறைவேற்றப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.