10 மாத பேத்தியை கல்லால் அடித்துக் கொலை செய்த தாத்தா!
01 Aug,2019
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தனது இரண்டாவது மனைவி பிரிந்து செல்லக் காரணம், மகனும், மருமகளும் தான் என்று நினைத்த நபர், பிறந்து 10 மாதமேயான சொந்த பேத்தியை கல்லால் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொள்ளாச்சி அருகே கருப்பம்பாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் தனது முதல் மனைவியைப் பிரிந்து இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு, மகன் குமார் – மருமகள் முத்துமாலை, 10 மாத பேத்தி தர்ஷினி ஆகியோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இரண்டாவது மனைவியும் அண்மையில் செல்வராஜை விட்டு பிரிந்து சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மருமகள் முத்துமாலையிடம் இருந்து பேத்தியை பறித்து விட்டு இருசக்கர வாகனத்தில் செல்வராஜ் சென்றதாக சொல்லப்படுகிறது. நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் கிணத்துக்கடவு போலீசில் புகாரளிக்கப்பட்டது.
இதை அடுத்து செல்வராஜின் செல்போன் சிக்னல் மூலம் ரயில் நிலையத்தில் அவரைக் கண்டுபிடித்த போலீசார் அவரிடம் விசாரித்த போது தர்ஷினியைக் கல்லால் அடித்துக் கொலை செய்து விட்டதாகக் கூறியதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஒத்தக்கால்மண்டபம்-தொப்பம்பாளையம் பிரிவு பகுதியில் குழந்தையைக் கொலை செய்ததாக அவர் கூறவே, செல்வராஜைக் கைது செய்து அங்கு அழைத்துச் சென்ற போலீசார் தர்ஷினியின் சடலத்தை மீட்டனர்.
தனது இரண்டாவது மனைவி தன்னை விட்டுப் பிரிந்து செல்ல காரணம் மகனும், மருமகளும் தான் என்று நினைத்து பேத்தியைக் கொலை செய்து விட்டதாக செல்வராஜ் வாக்குமூலம் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.