ஜேர்மனியில் ரயிலின் முன்பாக தள்ளிவிடப்பட்ட சிறுவன் உயிரிழப்பு – தாய் படுகாயம்!
31 Jul,2019
ஜேர்மனி – பிரான்பேர்ட் ரயில் நிலையத்தில் நின்றிருந்தபோது அதிவேக ரயிலின் முன்பாக பிறிதொருவரினால் தள்ளிவிடப்பட்ட எட்டு வயதுச் சிறுவன் உயிரிழந்ததுடன், அவனது தாயார் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று (திங்கட்கிழமை) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தின்போது எரித்ரியா நாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் வேண்டுமென்றே இவர்களை தள்ளிவிட்டதாகவும், தப்பிக்க முனைந்தபோது விரட்டிச்சென்றதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
40 வயது மதிக்கத்தக்க சந்தேகநபர் மூன்றாவதாக ஒருவரை தள்ளிவிட முயற்சித்தபோது அது பயனளிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, பொலிஸ் பேச்சாளர் ஒருவர் கூறுகையில், “தரிப்பிடத்திற்கு வந்துகொண்டிருந்த அதிவேக ரயிலின் முன்பாக தாயும் மகனும் தள்ளிவிடப்பட்டபோது, தாய் தன்னை காத்துக் கொண்டபோதும், மகன் நிலைதடுமாறி ரயிலின் முன்பாக வீழ்ந்து விட்டார்” என்று குறிப்பிட்டார்.
இந்தநிலையில் பொலிஸார் கொலை என்ற ரீதியில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.