கழிவறை தொட்டிக்குள் பெண் சடலம்..!
28 Jul,2019
வேலூரில் பெண்ணை கொலை செய்து சடலத்தை கழிவுநீர்த் தொட்டியில் மறைத்து வைத்த, கட்டிடத் தொழிலாளியை காவல்துறையினர் கைது செய்தனர். ரகசிய சந்திப்பை சாதகமாக்கி, சொத்துக்களை எழுதிக் கேட்டதால் நிகழ்ந்த பயங்கரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.
வேலூர் மாவட்டம் பாகாயம் அடுத்த மேட்டு இடையம்பட்டி பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரது மனைவி சுலோச்சனா. 43 வயதான இவர் மாயமான நிலையில், எங்கு சென்றார்- என்ன ஆனார் என்பது தெரியாத நிலையில், திருச்சியில் இருந்து விருந்துக்கு வந்திருந்த கிருஷ்ணமூர்த்தியின் சித்தப்பா மகனான ரமேஷ் என்பவர், அங்குள்ள டாஸ்மாக்கில் மது அருந்திவிட்டு தான் ஒரு கொலை செய்து விட்டதாக புலம்பியபடியே பாகாயம் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.
இதையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சுலோச்சனா மாயமான சம்பவத்தின் அதிர்ச்சிப் பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது.
மாயமான சுலோச்சனாவின் மகன் மற்றும் மகளுக்கு திருமணம் முடிந்து விட்ட நிலையில் சுலோச்சனாவுக்கும், ரமேஷுக்கும் முறையற்ற பழக்கம் இருந்து வந்துள்ளது. திருச்சியில் கொத்தனாராக வேலைபார்த்து வந்த ரமேசுக்கு மனைவியும் இரு பெண் குழந்தைகளும் இருக்கும் நிலையில், வாரந்தோறும் சுலோச்சனாவை தேடிச் செல்வதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளான். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
வேலூர், ஓட்டேரி அடுத்த இந்திரா நகர் பகுதியில் சுலோச்சனாவின் மருமகனுக்கு சொந்தமான வீடு உள்ளது. இங்கு வைத்துதான் சுலோசனாவை ரமேஷ் ரகசியமாக சந்தித்து வந்துள்ளான்
தனது பெயரில் உள்ள வீடு மற்றும் சொத்துகளை எழுதி வைப்பதாக சுலோச்சனாவிடம் ஆசை வார்த்தை கூறி வந்துள்ளான் ரமேஷ், இந்த நிலையில், சம்பவத்தன்று ரகசிய சந்திப்பு நடந்தபோது ரமேஷ்- சுலோச்சனா இடையே சொத்து தொடர்பான பேச்சு எழுந்துள்ளது. தனது பெயருக்கு சொத்துக்களை மாற்றிக் கொடுத்தால் தான் இனி சந்திக்க முடியும் என்று கூறி சுலோச்சனா புறப்பட்டதால் ரமேஷுக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, அங்கு கிடந்த இரும்புக் கம்பியால் சுலோச்சனா தலையில் பலமாக அடித்துள்ளான் ரமேஷ். ரத்த வெள்ளத்தில் மயங்கிச் சரிந்த சுலோச்சனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகின்றது. சடலத்தை வீட்டில் உள்ள கழிவறைத் தொட்டியில் வீசி மறைத்து விட்டு சென்றதாகக் கூறி, அந்த வீட்டையும் காவல் துறையினரிடம் அடையாளம் காட்டியுள்ளான்.
அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் சுலோச்சனாவின் சடலத்தைக் கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிணக்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். முறையற்ற உடல்சாந்த தேடலை தேடிச்சென்றால் முடிவில் என்ன நிகழும் என்பதற்கு சான்றாக நிகழ்ந்திருக்கின்றது இந்த கொடூரக் கொலை சம்பவம்..!