கோத்தா சுற்றிவளைக்கப்படுகின்றாரா? – யதீந்திரா (கட்டுரை)
02 Jul,2019
இன்று, கோத்தபாய ராஜபக்ச என்னும் பெயர் அனைத்து தரப்பாலும் உற்றுநோக்கப்படுகிறது. கோத்தபாய எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக செய்திகள் வெளியான நாளிலிருந்து, அனைவரது பார்வையும் அவர் மீதே திரும்பியிருக்கிறது.
ஒரு வருடத்திற்கு முன்னரேயே கோத்தபாய தனது ஆட்டத்தை ஆரம்பித்திருந்தார். தான் களமாட தயாராக இருப்பதாக கூறிவந்தார்.
அவர் அவ்வாறு கூறியதிலிருந்து அவரது எதிரிகளும் தங்களது பக்கத்தில் ஆட்டங்களை ஆரம்பித்தனர். இந்த இரண்டு ஆட்டங்களும் எவ்வாறு முற்றுப்பெறும் என்பது தொடர்பில் இப்போதைக்கு எவராலும் ஊகிக்க முடியாது.
மகிந்த தரப்பிலுள்ள ஒரு சிலர் இதற்கு எதிர்ப்பு வெளியிட்டிருந்த போதிலும் கூட, கோத்தபாய தன்னுடைய வேலைத்திட்டத்திலிருந்து பின்வாங்கவில்லை.
கோத்தபாய அமெரிக்க குடியுரிமையை கொண்டவர் என்னும் வகையிலேயே ஆட்சி மாற்றத்தின் பின்னர், இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்னும் புதிய நடைமுறை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
நீண்டகாலமாக அவ்வாறானதொரு நடைமுறை இலங்கையில் இருந்திருக்கவில்லை. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர் கோத்தபாய போன்றவர்களை சுற்றிவழைக்கும் ஒரு ஏற்பாடாகவே இந்த புதிய முறைமை அறிமுக்கப்படுதப்பட்டது.
அந்த அடிப்படையில் கோத்தபாய ராஜபக்ச தேர்தலில் போட்டியிட வேண்டுமாயின், அவர் தனது அமெரிக்க குடியுரிமையை கைவிட வேண்டும்.
இந்த பின்புலத்தில்தான் கோத்தபாய தனது குடியுரிமையை கைவிடும் ஆவணங்களை அமெரிக்க தூதரகத்தில் ஒப்படைத்திருந்தார்.
அவரது அமெரிக்க கடவுச் சீட்டும் தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுவிட்டது. எனினும் இதுவரை அவரது குடியுரிமை நீக்கப்பட்டமை, தொடர்பில் உறுதியான தகவல்கள் இல்லை ஆனால் அவர் தனது கடவுச் சீட்டை ஒப்படைத்ததிலிருந்து, அவர் தனது குடியுரிமையிலிருந்து விலகிக் கொண்டார் எனவே அவர் தேர்தலில் போட்டியிட ஒரு தடையும் இல்லை என்பது அவரது தரப்பின் வாதம்.
ஆனால் விடயங்களை தொகுத்து நோக்கினால் கோத்தபாயவின் ‘ஜனாதிபதி திட்டம்’ இன்னும் முழுமையடைவில்லையா என்னும் கேள்வியையும் அவ்வளவு இலகுவாக நிராகரிக்க முடியாது.
கோத்தபாய ராஜபக்சவின் தேர்தல் பிரவேசத்தை எவ்வாறாயினும் தடுத்து நிறுத்த வேண்டும் என்னும் முனைப்பும் இன்னும் முற்றுப்பெறவில்லை.
ஏற்கனவே கோத்தபாயவிற்கு எதிராக அமெரிக்க நீமன்றத்தில் இரண்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.
தற்போது மீண்டும் சித்திரவதைகள் தொடர்பில் புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. பத்துப் பேர் இவ்வாறு வழக்குகளை தாக்கல் செய்திருக்கின்றனர்.
கடந்த ஏப்பிரல் மாதம் கனடிய தமிழரான ரோய் சமாதானம் என்பவர் கோத்தபாயவிற்கு எதிராக கலிபோர்னிய மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கில் திருத்தம் செய்யப்பட்டு எட்டுத் தமிழர்கள் இரண்டு சிங்களவர்கள் என பத்துப் பேர் பாதிக்கப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
கோத்தபாயவை ஏதோவொரு வகையில் அமெரிக்க சட்டங்களால் முடக்குவதுதான் இதன் பிரதான நோக்கம் என்பது மிகவும் தெளிவாகவே தெரிகிறது.
ஏனெனில் இந்த வழக்குகளை கோத்தபாய அதிகாரத்தில் இருக்கின்ற போதே தாக்கல் செய்திருக்க முடியும் அல்லது ஆட்சி மாற்றத்தின் பின்னர் உடனடியாகவே இதனை செய்திருக்கலாம்.
ஆனால் அப்போதெல்லாம் செய்யப்படாத ஒன்று இப்போது அரங்கேற்றப்படுவதற்கு என்ன காரணம்? ஒரேயொரு காரணம்தான் இருக்க முடியும் – அதாவது, கோத்தபாயவை எப்படியாவது ஜனாதிபதி தேர்தல் திட்டத்திலிருந்து அப்புறப்படுத்துவது அல்லது அவர் தேர்தலில் பிரவேசிக்க முடியாதளவிற்கு சில முட்டுக்கட்டைகளை போடுவது.
இது சாதாரணமாக புரிந்துகொள்ளக் கூடிய ஒன்று. இங்கு விடயம் கோத்தபாய தொடர்பானதல்ல மாறாக, இவ்வாறான செயற்பாடுகள் மகிந்த முகாமை பலவீனப்படுத்துமா அல்லது பலப்படுத்துமா என்பதுதான்!
தென்னாபிரிக்காவை தளமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்டுவரும், அனைத்துலக உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் கீழ்தான், இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றன.
ஜஸ்மின் சூக்கா
இது ஒரு அரசுசாரா நிறுவனத் திட்டம். இதற்கு தலைமை தாங்குபவர் ஜஸ்மின் சூக்கா. இலங்கையின் இறுதி யுத்தம் தொடர்பில், ஜ.நா செயலாளர் நாயகம் பன்கீமூனால் நியமிக்கப்பட்ட மூவர் அடங்கிய நிபுனர் குழுவில் இவரும் ஒருவர்.
ஆபிரிக்க மனித உரிமைகள் நிலையம் என்னும் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளராக இருக்கும் சூக்கா, அந்த நிறுவனத்தின் ஒரு திட்டமாகவே மேற்படி உண்மை மற்றும் நீதிக்கான அனைத்துலக திட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்.
இதன் தொடர்ச்சியாகவே கோத்தபாயவை சுற்றிவழைக்கும் வகையில், இவ்வாறான வழக்குகளை தாக்கல் செய்வதற்கு பின்பலமாக தொழிற்படுகின்றார்.
இதன் உள்ளுர் அரசியல் தாக்கங்கள் எவ்வாறிருக்கும்? கோத்தபாயவும் அவரது குழுவினரும் சிங்கள மக்களின் வாக்குளில் மட்டும் தாம் வெற்றிபெற வேண்டும் என்னும் ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களால் மகிந்த தோற்கடிக்கப்பட்டார் என்னும் கருத்தை தனது நேர்காணல் ஒன்றில் கோத்தபாய நிராகரித்திருந்தார்.
தெற்கில் சரியாக பணியாற்றாத காரணத்தினால்தான் மகிந்த தோற்க நேர்ந்தது என்பது அவரது வாதமாகும்.
அதன் சரி தவறுகளுக்கு அப்பால் இவ்வாறானதொரு பிரச்சாரத்தை அவர்கள் தெற்கில் முன்னெடுத்துவருகின்ற நிலையில், யஸ்மின் சூக்காவின் இந்தச் செயற்பாடு அவர்களை மேலும் பலப்படுத்தத்தானே பயன்படும்?
ஏனெனில் ஒரு வேளை இவ்வாறான வழக்குகளால் கோத்தபாய தேர்தலில் போட்டியிட முடியாது போகுமானால், அது சிங்கள மக்கள் மத்தியில் மாறுபட்ட பார்வையை ஏற்படுத்தும்.
சிங்கள மக்களின் பாதுகாப்பாக விளங்கக் கூடிய தங்களின் தலைவரை மேற்குலகுமும், புலம்பெயர் புலிகளும் சதி செய்து போட்டியிட முடியாத நிலைமையை ஏற்படுத்தியிருக்கின்றனர்.
எனவே நாம் ஒன்றுபட்டு இந்தச் சதியை தோற்கடிக்க வேண்டும். எனவே நாம் அனைவரும் மகிந்தவின் கரங்களை பலப்படுத்த வேண்டும் என்னும் வகையில் தென்னிலங்கையில் ஒரு சிங்கள எழுச்சி ஏற்படலாம்.
இது பிள்ளையார் பிடிக்கப் போய் அது குரங்கான கதையாகிவிடலாம். யஸ்மின் சூக்காவின் வேலைத்திட்டம் தற்போதைய நிலையில் எதிர்மறையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தப் போகிறது.
ஒரு வேளை சூக்காவி;ன் நோக்கமும் அதுதானா? ஏனெனில் எல்லைவற்றையும் சந்தேகக் கண்கொண்டு ஆராய வேண்டிய நிலையில்தான் தமிழர்கள் இருக்கின்றனர் – இருக்க வேண்டும்.
தேர்தல் நெருங்க, நெருங்க கோத்தபாயவை சுற்றிவளைக்கும் வேலைகளும் தீவிரமடையலாம். அது உள்ளுரிலும் சர்வதேச அரங்குகளிலும் நிகழலாம்.
அனைத்தினதும் இலக்கு, கோத்தபாயவை எவ்வாறாயினும் தேர்தல் களத்திலிருந்து அப்புறப்படுத்த வேண்டும் என்பது மட்டும்தான்.
ஆனால் இதன் மூலம் கோத்தபாய சிங்கள மக்கள் மத்தியில் ஒரு கதாநாயகனாகிக் கொண்டிருப்பார் என்பது மட்டும்தான் உண்மை.
இது சிங்கள மக்கள் மத்தியில் ஒரு பேரெழுச்சியாக உருவெடுத்துவிட்டால் சிறுபாண்மைகளின் வாக்குகள் இல்லாமலேலேயே வெறிபெற்றுவிடலாம் என்னும் எண்ணமும் அவர்கள் மத்தியில் தலைதூக்கும்.
அவ்வாறானதொரு சூழலில் தமிழர்களின் வாக்குகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பில் தமிழ் மக்கள் ஒன்றுக்கு பலமுறை சிந்திக்க வேண்டும்.
தேவையற்ற வகையில் மற்றவர்களது நிகழ்சிநிரலுக்கு பலியாகி மேலும் நிலைமையை சிக்கலுக்குள்ளாக்கிவிடக் கூடாது.
கடந் பத்தியில் இவ்வாறானதொரு முன்னெச்சரிக்கையுடன்தான் மூன்று தெரிவுகள் தொடர்பில் இப்பத்தியாளர் ஆராய்த்திருந்தார்.
அது தொடர்பில் இன்னும் ஆழமாகவும் விரிவாகவும் பேசவும், விவாதிக்கவும் செயற்படவும் வேண்டிய தேவையிருக்கிறது.