பெற்றோர் என்ற தகுதியை அடைந்தவுடன் செக்ஸ் என்ற விஷயம் ஒரு தம்பதியின் வாழ்க்கையிலிருந்து தொலைதூரத்துக்குச் சென்றுவிடுகிறது. சில தம்பதிகள் தங்களது செக்ஸ் வாழ்க்கையே முடிவுக்கு வந்துவிட்ட எண்ணங்களுக்கு ஆட்படுகின்றனர். ஒண்டுக் குடித்தனத்தில் வாழ்க்கை, உறவினர்கள் வருகை, குழந்தைக்கு முக்கியத்துவம் என்று பல காரணங்கள் இதன் பின்னிருக்கின்றன. இது பற்றிக் கணவனோ, மனைவியோ வேறு எவருடனும் விவாதிப்பதில்லை என்பதும் முக்கியமான விஷயம். ஏன், அவர்களுக்குள்ளேயே விவாதிக்கும் அளவுக்குச் சூழல் அமையாது என்பதே நிதர்சனம். இதனால், குழந்தை பிறப்புக்குப் பிறகு செக்ஸ் கொள்வது தானாகக் குறைந்துபோகிறது.
முற்காலத்தில் வழக்கத்திலிருந்த கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையில் வயதில் மூத்த உறவினர் ஒருவர், குழந்தையைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வார். குறிப்பாக, தாய்ப்பால் புகட்டுதல் நிறுத்தப்பட்ட குழந்தைகள் பாட்டிகளின், அத்தைகளின், பெரியம்மாக்களின் பராமரிப்பில் வளரும். இப்போது நிலைமை அப்படியில்லை.
தனிக்குடும்ப வாழ்க்கை முறையில் எதுவானாலும் கணவனோ அல்லது மனைவியோ மட்டுமே கவனித்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம். தங்களுக்குள் சரிவரப் பேசிக்கொள்ளாமல் இருப்பது, குறைவான நேரம், களைப்பு, ஹார்மோன் மாற்றங்கள், பொருளாதாரக் கவலைகள் போன்றவை அவர்களது செக்ஸ் ஆசையை மனதின் ஆழத்தில் பதுக்கி வைக்கின்றன. மீறி உறவு கொள்ளும்போது, இருவரில் ஒருவருக்கு ஏற்படும் அயர்வும் நிலைமையை மோசமடையச் செய்கின்றன.
தள்ளிபோடப்படும் செக்ஸ்
குழந்தை பிறப்புக்குப் பிறகு, பெண்கள் ஒன்று முதல் மூன்று மாதங்கள் வரை செக்ஸ் ஆசையைத் தள்ளிப்போடுவது வழக்கத்தில் இருந்துள்ளது. அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகமான பிறகு, இந்த கால அவகாசம் ஆறு மாதங்களாக மாறிவிட்டது. தாய்ப்பால் ஊட்டும்போது ஆக்சிடோசின் எனும் ஹார்மோனால் பெண்களுக்கு செக்ஸ் உணர்வு எழும். ஆனால், அதே காரணத்தினால் செக்ஸ் கொள்ளும் ஆசையும் குறையும் என்பது நிச்சயம் முரண்தான். தாய்மையினால் உடலில் ஏற்பட்ட மாற்றங்களும்கூட செக்ஸ் ஆசை குறைவதற்குக் காரணங்களாக அமைகின்றன.
பிரசவத்துக்குப் பிறகு உறவு கொள்ளும்போது, சில பெண்கள் வலியை உணர்வார்கள். காலப்போக்கில் இது சரியாகும் என்றாலும், உயவு எண்ணெய் அல்லது ஆஸ்ட்ரோஜன் க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவது பயன் தரும். சில பெண்களுக்கு செக்ஸின்போது தசைப்பிடிப்பு அல்லது பதற்றம் ஏற்படவும் வாய்ப்புண்டு. வயிற்றுப் பகுதியில் தளர்வாக இருக்கும் சதை போன்ற காரணங்களால் பெண்களுக்கு செக்ஸில் விருப்பம் குறைவாகவே இருக்கும். தொடையிடுக்குப் பகுதியை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் இதைச் சரி செய்ய முடியும்.
தாய்ப்பால் சுரப்பது, பெண்ணுறுப்பு உலர்ந்திருப்பது ஆகியவையும் செக்ஸ் நிகழத் தடை போடும். என் கணவர் கண்ணுக்கு நான் அழகாகத் தெரிவதில்லை என்ற வருத்தம் சில பெண்களுக்கு உண்டு. குழந்தைப் பிறப்புக்குப் பிறகு உடலிலும் மனதிலும் ஏற்பட்ட மாற்றம், சில பெண்களின் மனதில் இந்த சிந்தனையை விதைக்கின்றன. ஆனால், குழந்தைப் பிறப்பினால் ஆண்களுக்கும்கூட செக்ஸ் விஷயத்தில் ஆர்வம் குறைவதாகச் சொல்கிறது ஆய்வு ஒன்றின் முடிவு.
பிரசவத்தினால் பாதிக்கப்படும் ஆண்கள்
சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரான்ஸ் நாட்டின் நோட்டர்டாம் நகரில் டாக்டர் லீ கெட்லர் என்பவர், குழந்தை பிறப்புக்குப் பிறகு அப்பாவாக ஆன ஆண்களிடம் ஏற்படும் மாற்றம் பற்றி ஆய்வு மேற்கொண்டார். பிரசவத்துக்குப் பிறகு பெண்களைப் போலவே ஆண்களும் உயிரியியல் ரீதியில் மாற்றத்துக்கு உள்ளாகுகிறார்கள் என்பதே இந்த ஆய்வின் சாராம்சம்.
“குழந்தைகளின் தேவைகளை உயிரியல்ரீதியாகத் தந்தைகளும் பூர்த்தி செய்கின்றனர். புதிதாக அப்பா ஆனவர்களின் உடலில் டெஸ்டோஸ்டீரான் அளவு 33-34 சதவிகிதம் வரை குறைகிறது. குறிப்பாக, நாள் முழுவதும் குழந்தை நலத்தில் கவனம் செலுத்துபவர்களிடம் இது நிகழ்கிறது. பாலூட்டி இனங்களில் மனிதன் தவிர வேறெந்த இனத்திலும் தந்தை இது போன்ற பணிகளை ஆற்றுவதில்லை” என்கிறார் கெட்லர்.
டெஸ்டோஸ்டீரான் குறைதல்
கெட்லரின் ஆய்வுக்காக, பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த 400 ஆண்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அப்போது அவர்களது வயது 21 ஆக இருந்தது. அதன்பின்னர், ஐந்து ஆண்டுகள் கழித்து அவர்களில் பலர் தந்தையாக ஆகியிருந்தனர். அப்போதும், அவர்களைச் சோதனைக்கு உட்படுத்தினார் கெட்லர். அதில், அவர்களது டெஸ்டோஸ்டீரான் அளவு குறைந்திருப்பது கண்டறியப்பட்டது. இதுவே குழந்தைப் பிறப்புக்குப் பின்னர் செக்ஸ் உறவு குறைந்துபோவதற்கும் காரணமாக அறியப்படுகிறது.
அதே நேரத்தில், டெஸ்டோஸ்டீரான் அளவு அதிகமுள்ள ஆண்களில் பலரது திருமண வாழ்வு பிரச்சினைகள் மிகுந்ததாகவும், விவாகரத்தில் கொண்டுபோய் நிறுத்துவதாகவும் உள்ளன என்பதும் பின்னர் தெரியவந்தது. “புதிதாகத் திருமணம் ஆகி அப்பா ஆனவர்கள் வாழ்க்கையில் செக்ஸ் குறைந்துபோனது உண்மை. அனைவரது டெஸ்டோஸ்டீரான் அளவும் குறைந்திருந்ததும் உண்மை” என்று இதற்கு விளக்கமளித்தார் கெட்லர். அதே நேரத்தில், ஆய்வுக்கு உட்பட்ட தந்தைகளின் எச்சிலில் அதிகளவில் ஆண்டிபாடிகள் இருப்பதும் கண்டறியப்பட்டது. இவை சளி, ப்ளூ காய்ச்சல் போன்றவற்றைத் தடுக்கும் இயல்புடையதாக இருந்தன. அதாவது டெஸ்டோஸ்டீரான் அளவு குறைவதனால் நோய் எதிர்ப்பு அமைப்பு உடலில் அழுத்தத்துக்கு உள்ளாவது உறுதியானது.
டெஸ்டோஸ்டீரானுக்கும் ஆண்மைக்கும் இடையே நெருக்கமான தொடர்பு இருந்தாலும், நிறைய ஆண்கள் சிறந்த ஆணாக இருப்பதைவிடச் சிறந்த தந்தையாகவே இருக்கின்றனர் என்பது கெட்லரின் வாதம். குழந்தை பிறப்புக்குப் பிறகு பெண்களுக்கு மட்டுமே செக்ஸ் ஆசை குறையும் என்ற வாதத்தை, கெட்லரின் ஆய்வு பொய்யாக்கியது.
நெருக்கத்தை வளர்த்தெடுக்கலாம்
குழந்தை பிறந்த பிறகு செக்ஸ் குறைவதைத் தவிர்க்க, அதை ஈடு செய்ய பல வழிகள் உள்ளன. சரியான செக்ஸ் உறவு அமையாதபோது இருவருக்குமான தகவல் தொடர்பு குறைந்துபோக வாய்ப்புள்ளது. இதைத் தவிர்க்க இருவரும் மனம்விட்டுப் பேச வேண்டும்; இணையின் பேச்சைக் கேட்க வேண்டும். ஒருவர் வேலைக்குச் செல்பவராகவும், இன்னொருவர் வீட்டைக் கவனிப்பவராகவும் இருக்கும் பட்சத்தில் வீட்டு வேலைகளைச் சிறிதளவிலாவது பகிர்வது நலம் பயக்கும். குறைந்தபட்சம் இருவரும் சேர்ந்து சாப்பிடும் வழக்கத்தையாவது மேற்கொள்ள வேண்டும். செக்ஸ் என்பது முக்கியம் என்றாலும், அதற்கு முன்பான கட்டியணைத்தல், கையை பிடித்துக் கொஞ்சுதல் போன்றவையும்கூட இருவரிடையேயான புரிதலை அதிகப்படுத்தும்.
24 மணி நேரமும் குழந்தையைக் கவனிக்கும் பெண்கள், தங்களுக்கென்று 15 நிமிடங்களாவது தினமும் ஒதுக்க வேண்டும். நடைப்பயிற்சி, புத்தக வாசிப்பு, நட்புடன் அளவளாவுதல் போன்றவற்றை மேற்கொள்வது மனதைப் புத்துணர்ச்சியாக்கும்.