அழியும் உயிரினங்கள், எச்சரிக்கும் விஞ்ஞானிகள் - தெரிந்து கொள்ள வேண்டிய 5 தகவல்கள்
05 May,2019
வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவுக்கு இயற்கை மீது பெரும் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது. காடுகள் அழிக்கப்படுகின்றன. மணம் வளம், கடல் வளம் கொள்ளையடிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் ஒன்றிணைந்து உலகை அழிவின் விளிம்பில் கொண்டு நிறுத்தி இருக்கிறது.
இப்படியான எச்சரிக்கையை விடுத்திருப்பது 50 நாடுகளை சேர்ந்த 500 வல்லுநர்கள்.
மனிதர்களின் கட்டற்ற சுரண்டலினால் பல்லாயிரகணக்கான உயிரினங்கள் எதிர்காலம் இருள் சூழ்ந்து இருப்பதாக கூறுகிறார்கள் விஞ்ஞானிகள்.
வல்லுநர்களின் இந்த உலகளாவிய மதிப்பீட்டு அறிக்கை யுனெஸ்கோவில் திங்கட்கிழமை பிரசுரமாக இருக்கிறது.
வேகமாக அழியும் பல்லுயிர் சூழல்
இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச யூனியன் (ஐயுசிஎன்) வெளியிட்டுள்ள அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களின் பட்டியலை பார்த்தாலே இந்த உலகம் எவ்வளவு மோசமான சூழலில் இருக்கிறது என்பது புரியும்.
எந்தெந்த உயிரினங்கள் அழிவின் விளிம்பில் இருக்கிறது என்பதை கண்டறிய ஒரு லட்சம் உயிரினங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் நான்கில் ஒரு பங்கு உயிரினங்கள் அழிவின் விளிம்பில் இருப்பது இப்போது வரை கண்டறியப்பட்டது. இந்த மதிப்பீடு இன்னும் முழுமையாக முடியவில்லை என்பது குறிப்பிடதக்கது.
குறிப்பாக அமுர் சிறுத்தை, கறுப்பு காண்டாமிருகம், போர்னியன் ஒரங்குட்டான், க்ராஸ் ரிவர் கொரில்லாக்கள், சுமத்ரன் யானை ஆகிய 5 விலங்குகளும் அழிவின் விளிம்பில் இருக்கின்றன.
இது குறித்து பிபிசியிடம் பேசிய, ராயல் பொடானிக் கார்டனின் அறிவியல் இயக்குநர் பேராசியர் அலெக்ஸாண்ட்ரே, "இந்த கிரகத்தின் உயிரினங்கள் மிகவேகமாக அழிந்து வருவதற்கு போதுமான ஆதாரங்கள் இப்போது உள்ளன" என்கிறார்.
மேலும் அவர், "66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இது போன்ற நிலை ஏற்பட்டது. அதற்கு காரணம் ஒரு சிறு கோள் இந்த பூமியை மோதியது. ஆனால், இந்த முறை இப்படியான அழிவுக்கு காரணம் மனிதர்களின் தவறுகள் மட்டுமே" என்கிறார்.
இந்த உலகின் வளமான பிரதேமான ஆப்ரிக்காதான் அதிக அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதாக தரவுகள் கூறுகின்றன.
பெரிய பாலூட்டிகளின் கடைசி புகலிடமாக இருக்கும் ஆப்ரிக்காவில் பாதிக்கு மேலான புள்ளினங்கள் மற்றும் பாலூட்டிகள் 2100ஆம் ஆண்டுக்குள் அழியும் என எச்சரிக்கிறது அந்த ஆய்வு.
பருவநிலை மாற்றம், வாழ்விட அழிப்பு
பல்லுயிர் சூழலை அழிப்பதில் பருவநிலை மாற்றமும், காட்டுவாழ் உயிரினங்களின் வாழ்விட அழிப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது. வாழ்விட அழிப்புக்கு காரணமாக இருப்பது விவசாயம், எரிபொருள் மற்றும் மர தேவைகள்தான்.
செடிகொடிகள், விலங்குகள் பின் மனிதர்கள்.
மனிதனின் செயல்பாடு மனிதர்களின் அழிவுக்கு காரணமாக இருக்கிறது.
நிலத்தை சீரழித்ததால் ஏறத்தாழ 3.2 பில்லியன் மக்களின் வாழ்க்கை அச்சுறுத்தலுக்கு உள்ளாகி இருப்பதாக கூறுகிறது பல்லுயிர் தொடர்பாக நாடுகளுக்கு இடையே இருக்கும் அறிவியல் கொள்கை தளம்.
இதற்கு காரணமாக இருப்பது இயற்கைக்கு பொருந்தாத விவசாய முறை.
உலகின் வெப்ப மண்டல பகுதியில் உள்ள 12 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு காடுகள் 2018ம் ஆண்டு மட்டும் அழிந்துள்ளன. அதாவது ஒரு நிமிடத்திற்கு 30 கால்பந்து மைதானத்தின் பரப்பளவு.
இந்தோனீசியா 2001ஆம் ஆண்டிலிருந்து மில்லியன் கணக்கான ஹெக்டேர் பரப்பளவு மழைக்காடுகளை இழந்துள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருப்பது பாமாயில் மரங்கள்.
2018ம் ஆண்டு இந்தோனீசியாவில் காட்டழிப்பானது அந்த அரசின் நடவடிக்கையால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
காட்டழிப்பின் காரணமாக பெருமளவில் ஓரங்குட்டான்கள் அழிவிற்கு உள்ளாகி உள்ளன.
அதுபோல சுமத்ரா மற்றும் போர்னியோ காடுகளீல் மூன்று பறவையினங்களில் ஒன்று அழிவிற்கு உள்ளாகி உள்ளது.
பல அரிய வகை உயிரினங்களுக்கு அமேசான் காடுதான் வாழ்விடமாக உள்ளது. கண்டுபிடிக்கப்படாத பல உயிரினங்கள் அங்கே உள்ளன.
அத்தகைய வளமான மழைகாட்டின் பரப்பு மேய்ச்சல் நிலமாக மாற்றப்பட்டதால், சுரங்க கட்டமைப்பால் அழிவுக்கு உள்ளாகி வருகிறது.