மிஸ் “சர்வதேச ராணி” போட்டியில் மகுடத்தை சூடிக்கொண்ட திருநங்கை.!
13 Mar,2019
உலக அழகு ராணி, பிரபஞ்ச அழகி போன்று மிஸ் “சர்வதேச ராணி” எனப்படும் சர்வதேச இளம் திருநங்கை ராணி மகுடத்தை இந்த வருடம் அமெரிக்கா சூடிக் கொண்டது.
கடந்த வார இறுதியில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அமெரிக்காவைச் சேர்ந்த ஜேசல் பார்பி ரோயல் என்ற திருநங்கை மகுடத்தை சூடிக்கொண்டார். இந்த வருட போட்டியில் இரண்டாம் இடத்தை தாய்லாந்தைச் சேர்ந்த கன்வரா கவுஜின் என்ற திருநங்கையும், மூன்றாவது இடத்தை சீனாவைச் சேர்ந்த யாயா என்பவரும் பெற்றுக் கொண்டனர்.
சமூகத்தில் பின் தள்ளப்படும் மாற்று பாலினத்தவர்களை உலகத்தவர் மத்தியில் ஊக்குவிப்பதற்கும், பிரபலமடைய செய்வதற்கும் இவ்வாறான போட்டி நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றமை வரவேற்கத்தக்கது.
உலகத் தரம் வாய்ந்த போட்டிகளின் போது சாதிக்கும் மாற்று பாலினத்தவர்கள் தங்களின் சமூகத்தைச் சேர்ந்த ஏனையவர்களையும் முன்னேற்றும் வகையில் செயற்படுவார்கள் என்பதுடன் தங்களின் திறன்களை வெளிக் கொணர்வார்கள் என்ற நோக்கத்திலேயே அவர்களுக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
தாய்லாந்தின் கரையோர நகரமான பட்டாயாவில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் இந்த திருநங்கை ராணி மகுடம் சூடும் விழா 14 -வது முறையாக இடம் பெற்றது. உலகின் மிகப் பெரிய மற்றும் பிரபலமான திருநங்கை அலங்கார அணிவகுப்பாக இது திகழ்கின்றது.
இது தவிர, “Miss International Queen” போட்டியின் போது தேசிய உடைகள், நீச்சலுடைகள் மற்றும் கவர்ச்சியான நவ நாகரீக ஆடை அலங்காரங்களுடன் பேஷன் ஷோவிலும் திருநங்கைகள் கலந்து கொண்டமை முக்கிய அம்சமாகும்.