விலைமாதர்கள் கவலை!
26 Jan,2019
‘சிவப்பு விளக்கு பகுதி’ சினிமாவில் காட்டுவதுபோல் அவர்கள் வாழ்க்கை இல்லை. இந்தியாவை பாரத தாய் என்றழைக்கும் நாம், தெய்வங்களை பெண்ணாக பார்க்கும் நாம் தான் இந்த பாவத்தை செய்கிறோம்!
‘சிவப்பு விளக்கு பகுதி’ என்பது, இந்தியாவில் சில மாநிலங்களில் அங்கீகரிக்கப்பட்ட இடமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. பாலியல் உணர்வுகள் வயதுக்கு வந்த ஆண்கள் அனைவருக்கும் இருந்தாலும் பலரும் சிவப்பு விளக்கு பகுதியை நாடுவதில்லை. பெரும்பாலானவர்கள் இந்த இடத்தை பற்றி சினிமாக்களில்தான் பார்த்திருக்கிறார்கள். கோடிகளில் சம்பளம் வாங்கும் பல நடிகைகள் விலை மாதர்களாக நடித்திருக்கின்றனர்.
அவர்களின் நடிப்பைவைத்தும், சினிமாக்களில் பார்த்திருக்கும் காட்சிகளை வைத்தும், ‘சிவப்பு விளக்கு பகுதி இப்படித்தான் இருக்கும்’ என்ற கற்பனை எல்லோர் மனதிலும் இருந்துகொண்டிருக்கிறது. அதாவது அதனை ஒரு ஜாலியான இடமாகவும், பணம்புரளும் இடமாகவும், கூத்தும் கும்மாளமும் நடக்கும் இடமாகவும்தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மையில்லை!
சிவப்பு விளக்கு பகுதி என்றாலே சில சினிமாக் காட்சிகள் நம் கண்முன்னே விரியும். பிரபல நடிகைகள் மீனாகுமாரி, ரேகா, வித்யாபாலன் போன்றோர் நம் கண் முன்னே வந்து போவார்கள். அவர்கள் விலைமாதுகளாக நடித்து புகழ் பெற்றவர்கள். பல கோடிகளை குவித்த ‘டர்ட்டி பிக்சர்ஸ்’ படத்தில் வித்யாபாலன் கிட்டதட்ட அப்படி ஒரு கதாபாத்திரத்தில்தான் நடித்தார். உம்ராவ்ஜான் படத்தில் ரேகா விலைமாதுவாக நடித்திருக்கிறார். கரீனா கபூர் சமேலி மற்றும் தலாஷ் போன்ற படங்களில் இந்த கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். மங்கள்பாண்டேவில்-ராணி முகர்ஜி, அமர் பிரேமில்-ஷர்மிளா தாகூர் போன்ற கதாநாயகிகளும் அந்த வேடங்களில் நடித்திருக்கிறார்கள். சாந்தினி பார் படத்தில் நடிகை தபு விலைமாது கதாபாத்திரத்திற்காக தேசிய விருது பெற்றிருக்கிறார்.
புதுடெல்லியில் வசிக்கும் தினேஷ்குமார் என்ற இளைஞர் சிவப்பு விளக்கு பற்றி தெரிந்துகொள்ள புறப்பட்டார். அலகாபாத்தில் உள்ள மீர்கஞ்ச் என்ற சிவப்பு விளக்கு பகுதிக்கு சென்றார். அங்கு அப்படிப்பட்ட பல தெருக்கள் உள்ளன. மொழிவாரியாக அங்கு பெண்கள் பிரிக்கப்பட்டிருக்கிறார்கள். மதராசி தெருவிற்குள் நுழைந்தால் அங்கே தமிழ் பேசும் விலைமாதர்கள் மட்டும் உள்ளனர்.