14 தொன் வெடிகளை, வானில் ஏவுவதற்கு காத்திருக்கும் அவுஸ்ரேலியர்கள்!
30 Dec,2018
புத்தாண்டு தினத்தன்று அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ன் நகரில் 14 தொன் வெடிகளை வானில் ஏவுவதற்கு எதிர்பார்த்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மெல்பேர்ன் நகரிலுள்ள 22 கட்டடங்களிலிருந்து சுமார் 14 தொன் எடையுள்ள பட்டாசுகளையும் வாண வேடிக்கைகளையும் வானில் ஏவி பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தப்போவதாகவும் ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
மெல்பேர்ன் நகரின் மையத்திலிருந்து ஏழு கிலோமீற்றர் சுற்றளவிலுள்ள ஒட்டுமொத்த வான்பரப்பும் அன்றிரவு ஒளிவெள்ளத்தில் மிதக்கும் என்கிறார்கள் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.
2019 ஆம் ஆண்டினை வரவேற்கும் முகமாக நள்ளிரவு 12 மணிமுதல் 10 நிமிடங்களுக்கு வானில் ஜாலம் நிகழ்த்தவுள்ள இந்த வேடிக்கை நிகழ்வுக்கும் பட்டாசுகளுக்கும் இரண்டு லட்சத்து 34 ஆயிரம் டொலர்கள் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுவருடப்பிறப்பான எதிர்வரும் திங்கட்கிழமை இரவு இந்த வாண வேடிக்கைகளை பார்ப்பதற்கு மெல்பேர்ன் நகருக்கு சுமார் மூன்றரை இலட்சம் மக்கள் வருகை தருவார்கள் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அன்றைய இரவை பாதுகாப்புடன் மக்கள் களிப்பதற்கு நகரின் பாதுகாப்பு உச்சநிலையிலிருக்கும் என்று விக்டோரிய பிரதமர் தெரிவித்துள்ளார். அன்றைய இரவு பாதுகாப்புக்கு மாத்திரம் சுமார் 34 லட்சம் டொலர்கள் செலவிடப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.