இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போது புதிய வரைவு அறிக்கை (Draft Notification) ஒன்றை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 15 வருடங்களுக்கு மேலான பழைய வாகனங்களை
அழிப்பது தொடர்பான வரைவு அறிக்கைதான் மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகத்திடம் இருந்து தற்போது வெளியாகியுள்ளது. இந்த வரைவு அறிக்கையின்படி, 15 வருடங்களை நிறைவு செய்த மத்திய மற்றும் மாநில அரசுகளின் அனைத்து வாகனங்களும் வரும் 2023ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து, 'ஸ்கிராப்' (Scrap) செய்யப்பட வேண்டும், அதாவது அழிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசுகளின் போக்குவரத்து கழகங்கள் மற்றும் போக்குவரத்து துறைகளின் பஸ்கள் மற்றும் இதர வாகனங்களுக்கும் இந்த புதிய உத்தரவு பொருந்தும். எனவே அவையும் அழிக்கப்பட வேண்டும். இந்த புதிய வரைவு அறிக்கை தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் பரிந்துரைகள் இருந்தால், அடுத்த 30 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
எனவே மாற்று கருத்துக்கள் இருக்கும்பட்சத்தில், அதனை தெரியப்படுத்தலாம். இந்த கொள்கை அமலுக்கு வரும்பட்சத்தில், 3 முக்கியமான நன்மைகள் கிடைக்கும். பழைய வாகனங்களில் இருந்து வெளியாகும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுவது குறையும் என்பதுதான் முதலாவது நன்மை. பொதுவாக காற்று மாசுபாடு பிரச்னைக்கு வாகனங்கள் மிக முக்கியமான காரணங்களாக இருக்கின்றன.
அதிலும் குறிப்பாக பழைய வாகனங்கள்தான் காற்றை மிக கடுமையாக மாசுபடுத்துகின்றன. எனவே அவற்றை அழித்து விட்டால், காற்று மாசுபாடு பிரச்னை குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக ஆட்டோமொபைல் துறை உத்வேகம் பெறும் என்பது இரண்டாவது நன்மை. அதாவது பழைய வாகனங்களை அழித்து விட்டால், அவற்றுக்கு பதிலாக புதிய வாகனங்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். எனவே தேவை அதிகரித்து, வாகன உற்பத்தி துறை
வளர்ச்சியடைவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதுதவிர அழிக்கப்படும் வாகனங்களில் இருந்து, ஸ்டீல் தொழில் துறைக்கு தேவையான மூலப்பொருட்கள் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும். இது மூன்றாவது நன்மையாகும். 15 வருடங்களுக்கு மேலான பழைய வாகனங்கள் அழிக்கப்பட வேண்டும் என்பது ஆட்டோமொபைல் துறையினரின் மிக முக்கியமான
கோரிக்கைகளில் ஒன்றாகும். இதன் மூலம் அவர்களுக்கு தொழில் வளர்ச்சி ஏற்படும் என்பது இதற்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது. அதே நேரத்தில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறி வரும் காலநிலை மாற்றம் (அல்லது பருவநிலை மாற்றம்) போன்ற பிரச்னைகளுக்கு இது நல்ல தீர்வுகளில் ஒன்றாக இருக்கும் என வல்லுனர்கள் தெரிவித்து வருவதையும் நாம் இங்கே
கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. புவி வெப்பமயமாதல் பிரச்னையை கட்டுப்படுத்துவதற்காக உலகின் பல்வேறு நாடுகளும் தற்போது பல்வேறு இலக்குகளை நிர்ணயம் செய்து, அதை அடைவதற்காக தீவிரமாக செயலாற்ற தொடங்கியுள்ளன. புவி வெப்பமயமாதல் மிகப்பெரிய அழிவுகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்திருப்பதுதான் இதற்கு காரணம்.
எனவே இந்தியாவில் முடிந்தவரை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. எனவே பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற வழக்கமான எரிபொருட்களை பயன்படுத்தி இயங்கும் வாகனங்களின் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டு கொண்டே வருகிறது. இதற்கு பதிலாக வரும் காலங்களில் எலெக்ட்ரிக்
வாகனங்களும் (Electric Vehicles) மற்றும் சிஎன்ஜி (CNG), எத்தனால் (Ethanol) போன்ற மாற்று எரிபொருட்களில் இயங்கும் வாகனங்களும் இந்திய சாலைகளை ஆட்சி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பதைதான் மத்திய அரசும் விரும்புகிறது.