இலங்கை தமிழர்களின் குடியுரிமை குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்: முதல்வர் மு.க ஸ்டாலின்!
20 Jun,2022
இன்று உலக அகதிகள் தினத்தையடுத்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முக்கிய செய்தியை வெளியிட்டுள்ளார். உலகில் போர், வன்முறை, வறுமை, வேலை இழப்பு போன்றவற்றால் உடமைகள், உரிமைகள், உறவுகள், இருப்பிடம் என அனைத்தையும் இழந்தவர்கள், அகதிகளாக உருவெடுக்கின்றனர். இவ்வாறு பாதிக்கப்பட்டு, அச்சுறுத்தலில் வாழ்ந்துவரும், ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார வசதிகளை ஏற்படுத்தும் விதமாக, ஜூன் 20ம் திகதி, உலக அகதிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
இது தொடர்பில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ஐக்கிய நாடுகளின் பொது அவையில் 2000-ஆம் ஆண்டில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் ஜூன் 20-ஆம் நாள், #WorldRefugeeDay எனக் கடைப்பிடிக்கப்படுகிறது.
‘யாதும் ஊரே! யாவரும் கேளிர்!’ என்பதே தமிழர் வாழ்வியல் மரபு. உலகெங்கும் அகதிகளாக வாழ்பவர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டிய நிலையில், தாய்த் தமிழ்நாட்டை நாடி வந்த இலங்கைத் தமிழ்ச் சொந்தங்களின் வாழ்க்கை மேம்பட நமது அரசு உறுதியான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
அகதிகள் முகாம் என்ற பெயரை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என மாற்றம் செய்து, அவர்களின் வாழ்வில் ஏற்றம் பெறுவதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. வாழ்வுரிமை - குடியுரிமை சார்ந்த கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பதிவிட்டுள்ளார்.