பொதுமக்களின் நலனுக்காக தனது பாதுகாப்பை குறைத்துக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!
10 Oct,2021
முதலமைச்சரின் பாதுகாப்புக்காக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விரைவாகவும், பாதுகாப்பாகவும் செல்வதற்காக அவரது வாகனத்தின் முன்பும் பின்பும் கான்வாய் எனப்படும் பாதுகாப்பு வாகனங்கள் செல்வது வழக்கம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து நாள்தோறும் தலைமைச் செயலகத்திற்கு சென்று வருகிறார்.
முதலமைச்சரின் வாகனம் செல்லும் சமயத்தில் அப்பகுதியில் போக்குவரத்து சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டு, சென்ற பிறகு மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும்.
இந்நிலையில் மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க முதலமைச்சரின் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கை பன்னிரெண்டிலிருந்து எட்டாக குறைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு போக்குவரத்து சிக்னலில் வாகனங்கள் நிறுத்தப்படுவது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த இடர்பாடும் இனி நடைமுறையில் இருக்காது.
ஆவின் பால் விலை குறைப்பு, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் போன்று பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்த முதலமைச்சர் மக்களின் நலனுக்காக இம்முடிவை எடுத்துள்ளார். ஏற்கனவே முதலமைச்சரின் வாகனம் செல்லும் வழிநெடுக பாதுகாப்புக்காக காவலர்கள் நிற்க வைக்கப்படுவது வழக்கமான இருந்த நிலையில், அதில் பெண் காவலர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.