1.71 லட்சம் பேருக்கு 'இ - சொத்து' அட்டைகளை வழங்கினார் மோடி
07 Oct,2021
புதுடில்லி :மத்திய பிரதேசத்தில் 'ஸ்வமித்வா' திட்டத்தின் கீழ், ௧.௭௧ லட்சத்துக்கும் அதிகமான பயனாளியருக்கு, 'இ - சொத்து' அட்டைகளை பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நேற்று வழங்கினார்.
மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் சார்பில் ஸ்வமித்வா திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது கிராமப்பகுதிகளில் வாழ்பவர்களுக்கு சொத்துரிமை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.நகர்ப்புறங்களில் உள்ளது போல, கிராமத்தில் வசிப்பவர்கள் கடன் பெறுவதற்கும், இதர நிதிப் பயன்களுக்கும், நிதிச் சொத்தாக நிலத்தை பயன்படுத்தவும் இந்தத் திட்டம் வழிவகுக்கிறது.'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் வாயிலாக, கிராமப்பகுதிகளில் நிலங்களை அளவிட்டு, மறுவரையறை செய்வதையும், இது நோக்கமாகக் கொண்டது. நாட்டில் ட்ரோன் தயாரிப்பிற்கான சூழலையும் இத்திட்டம் ஊக்கப்படுத்துகிறது.
இந்நிலையில், முதல்வர் சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கும் மத்திய பிரதேசத்தில் ஸ்வமித்வா திட்டத்தின் கீழ், ௧.௭௧ லட்சத்துக்கும் அதிகமான பயனாளியருக்கு, இ - சொத்து அட்டைகளை பிரதமர் மோடி, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நேற்று வழங்கினார்.அப்போது பயனாளியருடன் பிரதமர் மோடி பேசியதாவது:கிராமங்களில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் ஒரு வரலாற்று சிறப்புமிக்க திட்டம் இது.
இத்திட்டத்தின் வாயிலாக நாடு முழுதும் அனைத்து வீடுகளுக்கும் உரிய ஆவணம் கிடைப்பதை உறுதி செய்வோம். இது வெறும் சொத்து ஆவணம் வழங்கும் திட்டம் மட்டுமல்லாமல், கிராம மக்களிடம் நம்பிக்கையை அதிகரிக்கும் திட்டமாகவும் உள்ளது. நாட்டில் ட்ரோன் பயன்படுத்த விதிக்கப்பட்டு இருந்த பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால், விவசாயிகள், தொலைதுார பகுதிகளில் வசிப்பவர்கள் பெரும் பலன் அடைந்து உள்ளனர். இவ்வாறு பிரதமர் பேசினார். நிகழ்ச்சியில், ம.பி., முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பங்கேற்றார்.