சென்னையில் மூன்று பிராந்தியங்களில் ஆயிரத்தை தாண்டும் கொரோனா பாதிப்பு
22 May,2020
சென்னையில் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க நகர் ஆகிய 3 பிராந்தியங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் புதிதாக கொரோனா பாதிப்படைந்தவர்கள் பட்டியலில் சென்னை மட்டுமே தொடர்ந்து முன்னிலையில் உள்ளது.
தமிழகத்தில் நேற்று கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 776 பேரில் சென்னையில் மட்டும் 567 பேர் பாதிக்கப்பட்டனர்.
இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 8,795 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3,062 பேர் குணமடைந்துள்ளனர் என்பதுடன், 68 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் நேற்றைய பாதிப்புகளில் புதிய உச்சமாக ராயபுரத்தில் ஒரே நாளில் 161 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. ராயபுரம் பிராந்தியத்தில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 1,277 ஆக அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரத்தில் ராயபுரத்தில் தொற்று எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மொத்த பாதிப்புகளில் சென்னையில் மட்டும் பாதிக்கப்பட்டோரின் விகிதம் 62.9 சதவீதமாக உள்ளது.
நேற்றைய பாதிப்புகளில் ராயபுரம் பிராந்தியத்தில் 161 பேரும் அண்ணாநகர் மற்றும் தேனாம்பேட்டையில் தலா 57 பேரும் திரு.வி.க.நகரில் 56 பேரும் தண்டையார்பேட்டையில் 50 பேரும் கோடம்பாக்கம் 39 பேரும் வளசரவாக்கத்தில் 35 பேரும் அடையாறு 26 பேரும் அம்பத்தூரில் 24 பேரும் சோழிங்கநல்லூரில் 17 பேரும் மாதவரத்தில் 14 பேரும் பெருங்குடியில் 9 பேரும் மணலி மற்றும் திருவொற்றியூரில் தலா 7 பேரும் ஆலந்தூரில் 6 பேரும் புதிதாக பாதிக்கப்பட்டனர்.