இந்தியாவில் கொரோனாவால் ஆண்களே அதிகளவில் உயிரிழக்கின்றனர்!
22 May,2020
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையில் 64 சதவீதமானோர் ஆண்கள் எனவும், 36 சதவீதமானோர் பெண்கள் எனவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “இந்தியாவில் கொரோனாவுக்கு 3 ஆயிரத்து 584 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 64 சதவீதம்பேர் ஆண்கள் 36 சதவீதமானோர் பெண்கள் ஆவர்.
வயது அடிப்படையில் பார்த்தால் 0.5 சதவீதம்பேர் 15 வயதுக்கு உட்பட்டவர்கள். 2.5 சதவீதம்பேர் 15 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள். 11.4 சதவீதம்பேர் 30 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள்.
35.1 சதவீதம்பேர் 45 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள். 50.5 சதவீதம்பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். 73 சதவீதம்பேர், வேறு நோய்களாலும் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.
உலகளாவிய கொரோனா இறப்பு விகிதம் 6.65 ஆக உள்ளது. ஆனால் இந்தியாவில் இறப்பு விகிதம் 3.06 சதவீதம்தான். உரிய நேரத்தில் கொரோனா நோயாளிகளை கண்டறிவதும் முறையான சிகிச்சை அளிப்பதும்தான் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கு காரணம். குணமடைபவர்கள் விகிதம் 40.32 சதவீதமாக அதிகரித்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.