கொரோனா நோயாளிகளுக்கு மனநலன் பாதிக்கப்படும் -டாக்டர்கள் எச்சரிக்கை
20 May,2020
சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் வெளிப்பட்டது. இந்த 5 மாத காலத்தில் உலகம் முழுவதும் பரவி உள்ளது. நேற்றைய நிலவரப்படி இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 50 லட்சத்தை நோக்கி விரைகிறது. சரியாக சொல்வதென்றால், 49 லட்சத்து 71 ஆயிரத்து 684 ஆக உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்தது.நாட்டின் பல்வேறு மாநிலங்களில், கொரோனாவில் தாக்கம் குறைந்து காணப்பட்டாலும், மராட்டியம், குஜராத், டெல்லி, உத்திரப்பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில், தொற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது.
'தி லான்செட் சைக்கியாட்ரி' இதழில் வெளியிட்ட ஆய்வு கட்டுரை ஒன்றில் கொரோனா நோயாளிகளில் நான்கில் ஒருவர், மனநல பிரச்சினைக்கு ஆளாகிறார். இது வழக்கமாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு ஏற்படுவதுதான். எனினும் இந்த பிரச்சினை ஒருவரின் உயிரைப் பறிக்க அல்லது குணமடைவதை தாமதிக்க காரணமாக இருக்கிறது.
கொரோனா சிகிச்சைக்குப் பின் குணமடைந்தோர், தீவிர மன அழுத்தம், மன உளைச்சல், பதற்றம் ஏற்படலாம் அல்லது ஏற்படாமலும் இருக்கலாம். அதே நேரத்தில், மனப் பிரமை, குழப்பம், ஞாபக மறதி பிரச்சினைகளை சந்திக்க வாய்ப்புள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா நோயாளிகள் தனிமையில் வைக்கப்படுகின்றனர். அதுதான், அவர்களின் மனநல பாதிப்பிற்கு காரணமாக அமைகிறது. அதனால் அவர்கள், 'வீடியோ' மூலம் தங்கள் சுற்றத்தாரை காணவும், பேசவும் வசதி செய்தால், மன நலம் மேம்படும் சாத்தியக் கூறு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.