சென்னை சுற்றுவட்டாரங்களில், இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் நான்கு நாட்களுக்கு, தமிழகம் புதுச்சேரி கடலோர மாவட்டங்கள் உள்ளிட்ட பெரும்பாலான கடலோர மாவட்டங்களில், மழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் இன்று அதிகாலை 5.30 மணி முதல் சென்னையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது; பல இடங்களில் மின்சாரம் தடைபட்டுள்ளது.
மெரினா, சாந்தோம், மந்தைவெளி, மயிலாப்பூர், பெருங்குடி, கந்தன் சாவடி, நுங்கம்பாக்கம், அண்ணாநகர், அடையாறு, திருவான்மியூர், அசோக் நகர், ஈசிஆர் சாலை, தி.நகர், மேற்கு மாம்பலம், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, மத்திய கைலாஷ், ஆலந்தூர், கிண்டி, கோடம்பாக்கம், வளசரவாக்கம், வடபழனி, தாம்பரம், அனகாபுத்தூர், பூவிருந்தவல்லி, திருவேற்காடு, போரூர், ஆவடி, புழல், செங்குன்றம், திருவள்ளூர், மணவாள நகர், கடம்பத்தூர் உள்ளிட்ட சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்து வருகிறது.