ராகுல் காந்தி தலைக்கு லேசர் ஒளி மூலம் குறி வைக்கப்பட்டதா, உண்மை என்ன?
12 Apr,2019
அமேதி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தபோது அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பில் குறைபாடு இருந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியதாக சில செய்திகள் தெரிவித்தன.
அமேதியில் வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற ராகுல் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவரது தலையில் 7 முறை லேசர் ஒளிபட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியதாக செய்திகள் தெரிவித்துள்ளன.
இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்கு காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதி இருப்பதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதை அக்கடிதத்தில் சுட்டிக்காட்டிய காங்கிரஸ் கட்சி , ராகுல் காந்தியின் பாதுகாப்பில் உள்ள குறைபாடுகள் குறித்து எடுத்துரைத்துள்ளது.
இக்கடிதத்தில் மூத்த காங்கிரஸ் கட்சி தலைவர்களான அஹ்மத் பட்டேல், ஜெய்ராம் ரமேஷ் மற்றும் ரன்தீப் சுர்ஜீவாலா ஆகியோர் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
காங்கிரஸ் மறுப்பு
இந்நிலையில், பாதுகாப்பு குறைபாடு மற்றும் லேசர் ஒளி தொடர்பாக வந்த செய்திகள் குறித்து தாங்கள் உள்துறை அமைச்சகத்துக்கு எந்த கடிதமும் எழுதவில்லை என்று காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்தியுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி தலைவர் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், ”உள்துறை அமைச்சகத்துக்கு காங்கிரஸ் கட்சி எந்த கடிதமும் எழுதவில்லை. இந்த விஷயத்தில் உள்துறை அமைச்சகம் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது” என்று கூறினார்.
இதன்பிறகு உள்துறை அமைச்சகத்தின் கடிதத்தை செய்தியாளர்களிடம் அபிஷேக் மனு சிங்வி வாசித்தார்.
லேசர் ஒளி மூலம் ராகுலின் தலைக்கு குறி வைக்கப்பட்டதாக வந்த செய்திகள் குறித்து விசாரணை செய்ய தங்கள் உத்தரவிட்டதாக உள்துறை அமைச்சகம் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @INCIndiaLive
சிறப்பு பாதுகாப்பு குழுவின் தலைவருக்கு இது தொடர்பாக விசாரணை செய்ய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி விசாரணை மேற்கொண்ட சிறப்பு பாதுகாப்பு குழுவின் தலைவர், ராகுலின் தலையில்பட்ட பச்சை நிற ஒளி , ராகுலின் உரையை படம்பிடித்த ஒரு புகைப்பட நிபுணரின் கேமராவில் இருந்து வெளிப்பட்டதாக கண்டறிந்துள்ளார்.
இதன் பின்னர் இந்த தகவல் ராகுலின் தனி பாதுகாவலர்கள் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுபோன்ற எந்தக் கடிதமும் காங்கிரஸிடமிருந்து பெறப்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
அமேதி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் கடந்த 4-ம் தேதி ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
அதேபோல அவர் உத்தரப்பிரதேசம் மாநிலம் அமேதியில் புதன்கிழமையன்று தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.