நாம் தமிழர் கட்சி: 'ஈழத்தில் ஏற்பட்டது போல் தமிழகத்தில் ஏற்படும்' - சீமான்
07 Apr,2019
கடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவை ஆதரித்த நாம் தமிழர் கட்சி இந்த முறை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தனித்துப் போட்டியிடுகிறது.
தங்கள் அரசியல் நிலைபாடு, கொள்கைகள், பிற கட்சிகள் மீதான பார்வை, கச்சத்தீவு போன்ற விவகாரங்கள் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பிபிசி தமிழின் பிரபுராவ் ஆனந்தன் உடனான நேர்காணலில் இருந்து.
கேள்வி: 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரசாரம் செய்தது. ஆனால் அதிமுக-வை ஆதரித்தது. தற்போது ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுகவை எதிர்த்து நாம் தமிழர் கட்சி போட்டியிடுவதற்கு காரணம் என்ன?
பதில்: 2014 ஆம் ஆண்டு காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய இரண்டு கட்சிகளையும் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்தோம். ஒரு போர் தந்திரத்திற்காக அம்மையார் ஜெயலலிதாவை பயன்படுத்தி காங்கிரஸ் பாஜகவை வீழ்த்தினோம். இது போர் உத்தி. ஆனால் தற்போது நாங்களே வலிமையுடன் உள்ளோம். எனவே இந்த முறை நாங்கள் தனியாக களம் கண்டு வீழ்த்துவோம்.
கேள்வி: நாம் தமிழர் கட்சி சார்பில் 50 சதவீத பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் அது அரசியல் தந்திரமா?
பதில்: இதில் அரசியல் வியூகம், தந்திரம் என்பது ஒன்றும் இல்லை. இது ஒரு சமூகப் பொறுப்பு; பிறவிக்கடன். பெண்கள் மதிக்காத நாடு பெருமை பெற்றதில்லை. பெண்களுக்கு சம உரிமை கொடுக்க வேண்டும் என நான் நினைக்கிறேன்
கேள்வி: வேளாண் துறையை காக்க நாம் தமிழர் கட்சி என்ன நடவடிக்கை எடுக்கும்?
பதில்: வேளாண் துறையை நவீன மையமாக்க நிச்சயம் செயல்படுவோம். விவசாயத்தை பெருக்குவோம். வேளாண்மையை அரசுப் பணியாக மாற்றி அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது போல் வேளாண் விவசாயிகளுக்கும் ஓய்வூதியம் வழங்குவோம்.
கேள்வி: தமிழ் மண்னை தமிழர்கள்தான் ஆள வேண்டும் என சீமான் சொல்கிறார். இது ஃபாசிசம் கிடையாதா?
பதில்: இது ஃபாசிசம் கிடையாது. ஒரு தேசிய இன உரிமையை காப்பற்ற வேண்டும் என்பது மட்டுமே நோக்கம். மாநிலங்களை பிரித்ததன் நோக்கம் அந்தந்த மொழி பேசும் மக்கள் அந்த மாநிலத்தை ஆள வேண்டும் என்பதற்காக. கேரள மாநிலத்தின் வயநாடு தொகுதியில் போட்டியிடும் ராகுல் காந்தி காங்கிரஸ் சார்பில் கேரள மாநிலத்தில் முதல்வர் வேட்பாளராக பேட்டியிட முடியுமா? இதே போல் மோதியை வேறு மாநிலத்தில் போட்டியிட செய்ய முடியுமா அது போல் என் இன மக்களை தமிழன் ஆள வேண்டும் என்பது ஃபாசிசம் கிடையாது. அது எங்கள் உரிமை.
கேள்வி: திருப்பூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் உள்ள வட மாநிலத்தை சேர்தவர்களுக்கு ஓட்டு உரிமை வழங்கப்பட்டுள்ளது. அது குறித்து சீமானின் கருத்து என்ன?
பதில்: திட்டமிட்டு வெளி மாநிலத்தவர்களைக் குடியமர்த்தி வருகின்றனர். கேரளாவில் பதினைந்து ஆண்டுகள் வாழ்ந்தால் மட்டுமே குடியுரிமை வழங்கப்படும். ஆனால் தமிழகத்தில் ஒரே மாதத்தில் பெற்றுவிடலாம். இது ஒரு பேராபத்தான போக்கு. தமிழர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் ஈழத்தில் ஏற்பட்டது போல் தமிழகத்தில் ஏற்படும். சொந்த நிலத்தில் அடிமைகளாக வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
கேள்வி:காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை சீமான் எப்படி பார்க்கிறார்?
பதில்: அது வெறும் வெற்று அறிக்கை. 50 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்தபோது செய்யாத ஒன்றை இப்போது செய்வார்களா? இது மிகவும் வேடிக்கையாக உள்ளது. வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வங்கி கணக்கில் ஆண்டுக்கு 72 ஆயிரம் ரூபாய் செலுத்தபடும் என்கிறார்கள். எத்தனை ஆண்டுகளுக்கு வழங்குவார்கள்? வறுமையை முற்றிலும் ஒழிப்பது மட்டுமே ஒரு நல்ல தலைவனுக்கு அடையாளம்
கேள்வி: கடந்த ஐந்தாண்டு காலத்தில் பாஜக ஆட்சியின் செயல்பாடு குறித்து உங்கள் பார்வை என்ன?
பதில்: பாஜகவின் சாதனை என்று எதுவுமே இல்லை என்பதுதான் உண்மை. அதனை பாஜகவினரே ஒப்புக்கொள்கின்றனர். பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பொருளாதார கொள்கைகள், பண மதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி உள்ளிட்ட எந்தவொரு விஷயத்தையும் முன்வைத்து மக்களிடம் வாக்கு கேட்கவில்லை. அதனை விட்டு விட்டு புல்வாமா தாக்குதலில் அந்நிய நாட்டியிடம் இருந்து இந்தியாவை காப்பற்றி விட்டதாக ஒற்றை விஷயத்தை முன் வைத்து வாக்கு கேட்கிறார்களே தவிர ஐந்தாண்டு சாதனையை முன் நிறுத்தி மக்களை சந்திக்கவில்லை.
கேள்வி: நாம் தமிழர் கட்சி ஆட்சி பொறுப்பேற்றால் கச்சத்தீவு மீட்கப்படுமா?
பதில்: வெளியுறவுக் கொள்கை,பாதுகாப்புக் கொள்ளை, கல்விக் கொள்கை ஆகியவற்றில் இரண்டு கட்சிகளும் (காங்கிரஸ், பாஜக) ஒன்றுதான். காரணம் கட்சத்தீவை மீட்போம் என கடல் தாமரை மாநாடு போட்டதும், மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்கபடும் என அறிவித்தது அனைத்தும் கண் துடைப்பு. என்னைப் போன்றவர்களிடம் அதிகாரம் கிடைத்தால் கச்சத்தீவிவை மீட்பது என்பது ஒரு பெரிய பிரச்சனையே அல்ல. தமிழகத்தில் நடப்பது மத்திய அரசின் அடிமை ஆட்சி. ஆகையால் இவ்வாறான பிரச்சனையில் நடவடிக்கை எடுப்பதில்லை. திமுக, அதிமுக ஆகிய இரு அரசுகளும் தமிழர்களுக்கான அரசே கிடையாது.
கேள்வி: தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மதவாத அரசியல் செய்கின்றனவா?
பதில்: தமிழகத்தை பொறுத்த அளவில் மதவாதம் மதத்திற்கு எதிர்வாதம் என்ற இரண்டை வைத்து அரசியல் நடத்தி வருகின்றனர். இரண்டையும் ஒழிக்க வேண்டும் என்பதே நாம் தமிழரின் நோக்கம். இன்று மதசார்பற்ற கூட்டணியில் உள்ள திமுக ஒரு காலத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தது. எனவே எல்லாமே போலியான எதிர்ப்பு நிலை. கம்யூனிஸ்ட் கட்சி தமிழகத்தில் ராகுலை பிரதமராக வேண்டும் என்கிறார்கள். ஆனால் கேரளாவில் ராகுல் காந்திக்கு எதிராக வேட்பாளரை நிறுத்துகின்றனர். எனவே கொள்கை வாதத்தில் முரணாக உள்ளது