பெங்களூரில் 20 மாணவர்கள் முன்பு பள்ளி முதல்வர் வெட்டிக் கொலை.
14 Oct,2018
பெங்களூருவில் 20 மாணவர்கள் முன்பு பள்ளி முதல்வர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூருவில் உள்ள அக்ரஹாரா தாசரஹள்ளியில் ஹவனூர் பப்ளிக் ஸ்கூல் என்ற தனியார் பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் முதல்வர் ரங்கநாத்(60). தனக்கு சொந்தமான பள்ளியில் முதல்வராக உள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை ரங்கநாத் ஸ்பெஷல் கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தார். அந்த ஸ்பெஷல் கிளாஸில் 20 மாணவர்கள் கலந்து கொண்டனர். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் பள்ளிக்குள் புகுந்தது.
அந்த கும்பல் மாணவர்கள் கண் முன்பு ரங்கநாத்தை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியோடியது. முதல்வர் கொலை செய்யப்பட்டதை பார்த்த மாணவர்கள் பேரதிர்ச்சியில் உள்ளனர்.
கொலையாளிகள் குறித்து கிடைத்த தகவலை அடுத்து போலீசார் மகாலட்சுமி லேஅவுட்டுக்கு சென்று ஒரு குற்றவாளியை துரத்தி காலில் சுட்டுப் பிடித்தனர். அந்த குற்றவாளி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பள்ளி செயல்பட்டு வரும் நிலம் தொடர்பான பிரச்சனையில் தான் ரங்கநாத் கொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.