ஜெயலலிதா பயன்படுத்திய ஹெலிகாப்டர் விற்கப்படுகிறது : தமிழக அரசு முடிவு
11 Oct,2018
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா பயணத்துக்காக கடந்த 2006-ம் ஆண்டு நவீன ஹெலிகாப்டர் ஒன்று வாங்கப்பட்டது. “பெல் 412 இ.பி.” என்ற வகையைச் சேர்ந்த இந்த ஹெலிகாப்டர் 2 என்ஜின்கள் கொண்டது. 11 பேர் அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்ய முடியும்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த கால கட்டங்களில் பல தடவை அந்த ஹெலிகாப்டரை பயன்படுத்தி உள்ளார். அவர் மரணத்துக்கு பிறகும் அந்த ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டு வந்தது.
கடைசியாக அந்த ஹெலிகாப்டர் கடந்த மார்ச் மாதம் வரை பயன்படுத்தப்பட்டது. பிறகு பழுது அடைந்ததால் அதன் செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு விட்டன.
தற்போது அந்த ஹெலிகாப்டர் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அந்த ஹெலிகாப்டரை பழுது பார்த்து பயன்படுத்துவதற்கு அதிக செலவாகும் என்பதால் அந்த ஹெலிகாப்டரை விற்பனை செய்து விட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளும்படி மாநில வணிக நிறுவனத்துக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அந்த ஹெலிகாப்டரை விற்பதற்கு சர்வதேச அளவில் டெண்டர் கோரப்பட்டுள்ளது. விரைவில் ஹெலிகாப்டர் விற்பனை நடைபெறும் என்று தெரிகிறது. ஹெலிகாப்டரை விற்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் சென்னை விமான நிலையத்துக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.