இந்தியா மீது பொருளாதார தடை : அமெரிக்கா எச்சரிக்கை
03 Oct,2018
இந்தியா மீது பொருளாதார தடை : அமெரிக்கா எச்சரிக்கை
ரஷ்யாவுடன் எஸ்-400 ஏவுகணைகளை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால் இந்தியா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இன்று டில்லி வருகிறார். பிரதமர் மோடியுடன் நாளை அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது இருநாடுகளுக்கும் இடையே சுமார் ரூ.39,000 கோடி மதிப்புடைய ஏவுகணைகள் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இது தவிர மேலும் 20 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ரஷ்யாவிடமிருந்து போர் ஆயுதங்களை வாங்குவதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட சட்டத்திருத்தம் ரஷ்யா, ஈரான், வடகொரியா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து போர் ஆயுதங்களை வாங்கும் நாடுகளுக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் டிரம்ப் மட்டுமே இந்த தடையை நீக்கக்கூடிய அதிகாரம் படைத்தவராக அச்சட்டம் தெரிவிக்கிறது. அமெரிக்காவின் தடையை விலக்க அதிபர் டிரம்ப்பிடம் கோரிக்கை விடுக்க இந்தியா முடிவு செய்துள்ளது. திட்டமிட்டபடியே ரஷ்யாவுடன் ஏவுகணை ஒப்பந்தத்தை தொடர்வதற்கும் இந்தியா உறதியான நிலைப்பாடு எடுத்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து இந்திய செய்தியாளர்களின் கேள்விக்கு விளக்கம் அளித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் , இந்தியாவுக்கு பொருளாதாரத் தடைகளில் இருந்து விலக்கு அளிக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். அமெரிக்காவின் நட்பு நாடுகள் ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்கள் வாங்கக்கூடாது என்றும், இந்தியா ஏவுகணை ஒப்பந்தத்தை கைவிடுவதுதான் நல்லது என்றும் தெரிவித்துள்ளார்.