சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ் சென்னையில் உள்ள அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
சட்டமன்ற உறுப்பினரும், நடிகருமான கருணாஸ் கடந்த 16-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், தமிழக முதல்வர் தன்னைக் கண்டு அஞ்சுவதாகத் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, `சட்டையை கழற்றிவிட்டு வந்து நேருக்கு நேர் என்னுடன் மோதத் தயாரா?' எனப் போலீஸ் அதிகாரி ஒருவருக்கு, கருணாஸ் சவால் விடுத்தார். மேலும் சாதி ரீதியாகவும் கூவத்தூரை அடையாளம் காட்டியது நான்தான் எனவும் அவர் பல்வேறு சர்ச்சை கருத்துக்களைத் தெரிவித்தார்.
அவர் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைலாகியது. முதல்வர் மற்றும் காவல்துறையை அவதூறாகப் பேசியதால், அவர் மீது நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. யூடியூபில் வெளியான இந்த வீடியோவை அடிப்படை ஆதரமாகக் கொண்டு அவர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில், காவல்துறையினரால் கருணாஸ் கைது செய்யப்பட்டார். அப்போது பேசிய அவர், `அரசு திட்டமிட்டே பழிவாங்குகிறது. சிறைச்சாலைகள் எங்களுக்காகத் தான் கட்டப்பட்டுள்ளன. வழக்கை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொள்வேன்' என்று தெரிவித்தார்.
கருணாசுக்கு ஒக்டோபர் 5-ம் திகதி வரை விளக்கமறியல்
தமிழக முதலமைச்சர் மற்றும் காவல்துறையினரை அவதூறாக பேசிய வழக்கில் இன்று காலை கைது செய்யப்பட்ட கருணாஸை ஒக்டோபர் 5-ம் திகதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு எழும்பூர் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கருணாஸ் மீது என்னென்ன பிரிவுகளின் கீழ் வழக்கு?- கொலை முயற்சி பிரிவு நீக்கம்; அக்.5 வரை சிறை
வன்முறையைத்தூண்டும் பேச்சால் கைது செய்யப்பட்ட கருணாஸ் மீது போடப்பட்ட 307 வது பிரிவை நீக்க உத்தரவிட்ட நீதித்துறை நடுவர் வரும் அக்.5 வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
நடிகர் கருணாஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கட்டப்பஞ்சாயத்து செய்வதாக எழுந்த புகாரின்பேரில் தி.நகர் டிசி அரவிந்தன் உத்தரவின்பேரில் வடபழனி போலீஸார் நடவடிக்கை எடுத்தனர். இதில் கோபமடைந்த கருணாஸ் ஆர்ப்பாட்டம் ஒன்றை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த 16-ம் தேதி நடத்தினார்.
அந்த ஆர்ப்பாட்டத்தில் தனது சமுதாயப் பெருமையை பெரிதாகப் பேசிய கருணாஸ் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பதவியைப் பற்றியும் அவர் தான் அடித்து விடுவேன் என்று தன்னைப் பார்த்து பயப்படுவதாகவும் பேசினார்.
பின்னர் தனது ஆட்களின் வீரப்பிரதாபங்களைப் பேசிய கருணாஸ், ''நீங்கள் எல்லாம் ஒரு ஆளை கொலை பண்ண வேண்டும் என்றால் பத்து ஆட்களை சேர்த்துக்கொண்டு குடித்துவிட்டு இரவு முழுவதும் திட்டமிட்டு பின்னர் கொலை செய்வீர்கள். நாங்கள் தூங்கி எழுந்து பல் தேய்க்கும் நேரத்தில் செய்துவிடுவோம்'' என்று பேசினார்.
பின்னர் ஒரு நாளைக்கு குடிப்பதற்கே ரூ.1 லட்சம் செலவு செய்வதாகத் தெரிவித்த அவர் கொலை செய்வதாக இருந்தால் என்னிடம் சொல்லிவிட்டுச் செய் என்று தொண்டர்களைப் பார்த்துப் பேசினார். பின்னர் தனது ஆட்களின் காலை ஒடி கையை ஒடி என்று உத்தரவிட்டால் அந்த உத்தரவிட்டவன் காலை ஒடி என்று பேசினார்.
பின்னர் ஐபிஎஸ் அதிகாரி அரவிந்தனை நேரடியாக வம்பிழுத்த அவர் உனக்கு என்ன அப்படி ஈகோ, பதவி இருக்கும் அதிகாரம்தானே உன் காக்கிச்சட்டையை கழற்றிவிட்டு வா பார்த்துக்குவோம் என்று திரும்பத் திரும்பப் பேசினார். நான் நினைத்திருந்தால் யூனிபார்மை கழற்றியிருப்பேன் என்றெல்லாம் பேசினார்.
இதையடுத்து அவரை கைது செய்ய கண்டனக்குரல் எழுந்தது. கருணாஸ் மீது நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆய்வாளர் ராஜசேகரன் என்பவர் அளித்த புகாரின் பேரில் கொலைமுயற்சி (307), கொலை மிரட்டல் (506(2)), வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது (153), இரு சமூகத்தினரிடையே வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது (153(A)(1)(a)) பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் தூண்டும் வகையில் பேசுவது (504), தனது கருத்தின் மூலம் பொது மக்களுக்குத் தீங்கு ஏற்படும் வகையில் நடப்பது 505(i) பொதுமக்களுக்கு எதிராகவோ மக்களுக்கு எதிராக அச்சத்தை ஏற்படுத்துவது (b) உள் நோக்கத்துடன் மாற்று சமூகத்திற்கு அச்சத்தை உருவாக்கும் வகையில் எதிராகப் பேசுவது(c) தூண்டுவது, உருவாக்குவது (ii), கொலை முயற்சி 307, கொலைமிரட்டல் 506(i) சென்னை மாநகர போலீஸ் சட்டம் அனுமதியை மீறி கட்டுப்பாடுகளை மீறிப் பேசுவது (41(6)(a)(b)(c) MCP Act 1888) குற்றச்சதி (r/w 120(B))IPC ஆகிய பிரிவுகளின் கீழ் நுங்கம்பாக்கம் போலீஸாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டு கைது செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அவரை கைது செய்யாமல் போலீஸார் காலம் தாழ்த்தினர். இந்நிலையில் நேற்று மதுரையில் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி சட்டம் தன் கடமையைச் செய்யுமென்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை திடீரென கருணாஸ் மற்றும் செல்வநாயகம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவரை கைது செய்த போலீஸார் நுங்கம்பாக்கம் காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய பின்னர் அவரை எழும்பூர் 13 வது குற்றவியல் நடுவர் கோபிநாத் வீட்டில் போலீஸார் ஆஜர்ப்படுத்தினர். அங்கு அவர்மீது போடப்பட்ட கொலை முயற்சி வழக்குக்கு கருணாஸின் வழக்கறிஞர் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. நீதிமன்ற நடுவரும் கொலை முயற்சி வழக்கை ரத்துச் செய்ய உத்தரவிட்டதை அடுத்து போலீஸார் அதை திரும்ப பெற்றனர்.
இதையடுத்து கருணாஸ், செல்வநாயம் இருவரையும் வரும் அக்.5 வரை சிறையில் அடைக்க நீதிமன்ற நடுவர் உத்தரவிட்டதை அடுத்து இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். கருணாஸ் மீது கடந்த ஏப்ரல் மாதம் ஐபிஎல் போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கும் தூசு தட்டி எடுக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் போராட்டத்தில் இரண்டு சம்பவங்களின் போது 13 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கீழ்கண்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மீதும் விரைவில் அவர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
கருணாஸ் புழல் சிறையிலிருந்து வேலூர் சிறைக்கு மாற்றப்படுகிறார்
சர்ச்சை, மிரட்டல், அவதூறு பேச்சு பேசியதாகக் கைது செய்யப்பட்ட நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்படுகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ.வான கருணாஸ் முதல்வர், காவல்துறையை அவதூறாகவும் மிரட்டும் விதமாகவும் பேசியதாக இன்று காலை கைது செய்யப்பட்டார்.
பிறகு அவர் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டு 3 மணி நேரத்துக்கு மேலாக விசாரிக்கப்பட்டார். பிறகு எழும்பூர் 13ஆவது நீதிமன்ற நீதிபதி கோபிநாத் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருடன் கைதாகிய செல்வநாயகம், கார்த்திக், நெடுமாறன் ஆகிய கட்சி நிர்வாகிகளும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதையடுத்து கருணாஸ் மீதான வழக்கை விசாரித்த நீதிபதி கொலை முயற்சி பிரிவை (307) ரத்து செய்தார். மேலும் கருணாஸ் மற்றும் முக்குலத்தோர் புலிப்படையை சேர்ந்த நிர்வாகி செல்வநாயகம் ஆகியோரை அக்டோபர் 5-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனிடையே எம்.எல்.ஏ. கருணாஸ் தரப்பில் நாளை காலை 10 மணிக்கு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து எம்.எல்.ஏ. கருணாஸ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ. கருணாஸ் புழல் சிறையில் இருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றப்படுகிறார். அவர் மீது கூடுதலாக 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.