எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்திருந்தால் இலங்கை - இந்தியப் பிரச்சினைக்கு என்றோ தீர்வு கிடைத்திருக்கும்"
17 Sep,2018
இலங்கையில் பிறந்து இந்தியாவில் பிரகாசித்த எம்.ஜி.ஆர் ஒரு பொக்கிஷம்: சபாநாயகர் புகழாரம்
மீனவர்களும் வாழ்க்கை போராட்டத்தில் தான் இருக்கின்றார்கள், அவர்களின் பிரச்சினை மனிதநேய அடிப்படையில் நோக்கப்பட வேண்டும் என சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரனின் 102ஆவது பிறந்த தின நிகழ்வுகள் அவர் பிறந்த ஊரான கண்டியில் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை நாட்டில் பிறந்து இந்தியாவில் பிரகாசித்த எம்.ஜி.ஆர் அவர்களை பாராட்டுவது எங்களது கடமை என நான் நினைத்தேன். நாங்கள் மிக அன்பாக போற்றுகின்ற எம்.ஜி.அர் அவர்களை ஒரு பொக்கிஷமாக நாங்கள் தமிழகத்திற்கு கொடுத்திருக்கின்றோம்.
நாங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் அவரை பிரித்து பார்க்கவிரும்பவில்லை. எங்களில் ஒருவராகவே எம்.ஜி.ஆரை பார்க்கின்றோம்.
அதேபோன்று எங்களுடைய தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுடைய இலங்கை விஜயமானது வரலாற்றில் இடம்பெறக்கூடிய ஒரு சிறப்பு நிகழ்வாக நான் அறிவிக்கின்றேன்.
இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்தன. அந்த கருத்து வேறுபாடுகள் காரணமாக எங்களது உறவு பாலத்தில் பல்வேறு மாற்றங்களும், தாக்கங்களும் ஏற்பட்டிருந்தன.
ஆனால் இப்போது நினைத்து பார்க்கின்றேன். அன்று அவ்வாறான ஒரு சூழ்நிலை எற்படாமல் இருந்திருந்தால் இன்று நாங்கள் இருக்கின்றதை விட மிக சந்தோஷமாக இருந்திருக்கலாம்.
இலங்கை அரசு என்ற ரீதியிலும், உயர்மட்ட ரீதியான ஒரு குழுவினராக நாங்கள் தமிழ்நாட்டிற்கு சென்று தமிழகத்துடைய எல்லா தலைவர்களையும் பார்த்து எங்களுடைய நல்லெண்ண முயற்சிகளை வலுவடைய செய்வோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழ் மக்களின் உறவுப் பாலமாக தமிழக அரசு இருக்கும்: இலங்கையில் செங்கோட்டையன்
தமிழ் மக்களிற்கு ஒரு உறவுப் பாலமாக தமிழக அரசு என்றும் இருக்கும் என தமிழக கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.
மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரனின் 102ஆவது பிறந்த தின நிகழ்வுகள் அவர் பிறந்த ஊரான கண்டியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றன.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
“தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் தமிழக அரசு என்றுமே அக்கறையுடன்தான் செயற்பட்டு வருகின்றது. அந்தவகையில், தமிழ் மக்களிற்கு ஒரு உறவுப் பாலமாக தமிழக அரசு என்றும் இருக்கும்.
மேலும் என்றுமே தமிழக அரசு இலங்கை மக்களுக்கு உறுதுணையாக இருக்கும். இங்கு மக்கள் சிந்துகின்ற கண்ணீர் துடைக்கப்பட்டு ஒரு விடிவுகாலம் விரைவில் கிடைக்கும்.
இலங்கையும் இந்தியாவும் ஒரு சகோதர பாசத்துடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கு என்றும் தமிழக அரசு உறுதுணையாக இருக்கும் என நான் உறுதியளிக்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.
I
"எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்திருந்தால் இலங்கை - இந்தியப் பிரச்சினைக்கு என்றோ தீர்வு கிடைத்திருக்கும்"
மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜீ.ஆர் இன்று உயிரோடு இருந்திருந்தால் இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நீடிக்கின்ற சில முரண்பாடுகளுக்கு என்றோ தீர்வு கிடைத்திருக்கும் என கல்வி இராஜாங்க அமைச்சர் இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
மேலும் இலங்கை மக்களை எம் மக்கள் என அழைக்கும் அவர், இலங்கையில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் உதவி செய்துள்ளார்.
எம்.ஜி.ஆர் ஒரு சிறந்த நடிகர், அரசியல்வாதி, நல்ல மனிதன் ஆவார். அது மட்டுமல்லாமல் அவர் சமூகத்திற்கு ஒரு முன்மாதிரியாக செயல்பட்ட மனிதர் என்பதை நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஏழைகளுக்கு அவர் உதவி செய்தவர். என்றும் அவர் ஏழை மக்களை கைவிட்டதில்லை என்றார்.
"இலங்கை தமிழர்கள் விடயத்தில் தமிழக அரசு தொடர்ந்தும் குரல் கொடுக்க வேண்டும்"
தமிழ்நாட்டிலே தமிழக அரசு இலங்கை தமிழ் மக்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளின் போது குரல் கொடுக்க வேண்டும், ஆதரவும் தர வேண்டும் என இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
அத்துடன் இலங்கையில் வாழும் அனைத்து தமிழ் மக்களுக்கும் தமிழ்நாடு ஒரு காவலன் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எமக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளை தீர்ப்பதற்கான உலக ரீதியான ஒரு ஆதரவையும் வழங்குகின்றது.
நாங்கள் இருக்கின்றோம் உங்களுக்காக என்று சொல்லுகின்றார்கள். இதனால் நாங்கள் நம்பிக்கையோடு இருக்கின்றோம்.
மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜீ.ஆர். விட்டுசென்ற பணிகளை மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எமக்கு தொடர்ந்தும் பணிகளை செய்து வந்தார். அவர் வழியில் இன்னும் எமக்கு பணிகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது என்றார்.
மறைந்த தமிழக முதலமைச்சர் எம்.ஜி. இராமச்சந்திரனின் 102 ஆவது பிறந்த தின நிகழ்வுகள் அவர் பிறந்த ஊரான இலங்கையில் கண்டியில் நேற்று நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.