இன்று காலை 7 மணியில் இருந்தே பேரணிக்கான ஏற்பாடுகள் குறித்து விசாரித்தபடியே இருந்தார் அழகிரி. ‘வெயில் தொடங்குவதற்குள் பேரணியை ஆரம்பித்துவிட வேண்டும்’ என நினைத்தார்.
தி.மு.க தலைமைக்கு எதிராக நடந்த அமைதிப் பேரணி வெற்றியடையாமல் போனதில் மிகுந்த கொதிப்பில் இருக்கிறார் அழகிரி.
‘பேரணியில் ஸ்டாலினுக்குக் கெடு விதிக்கும் முடிவில் இருந்தார். மெரினாவில் எதிர்பார்த்த கூட்டம் கூடாததால் மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார் அழகிரி’ என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி சமாதியை நோக்கி இன்று அமைதிப் பேரணி நடத்தினார் மு.க.அழகிரி. கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, “கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தவே இந்தப் பேரணி நடத்தப்பட்டது.
வேறு எந்த நோக்கத்துடனும் நடத்தப்படவில்லை. பேரணி வெற்றிகரமாக நடைபெற்றது.
இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்த காவல்துறைக்கு நன்றி. இந்தப் பேரணியில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்றனர்” என்றார். இதைக் கூறும்போது அவர் முகத்தில் பெரிதாக எந்த உற்சாகமும் தென்படவில்லை.
அழகிரி ஆதரவாளர் ஒருவரிடம் பேசினோம். “தென்மாவட்டங்களைப் பொறுத்தவரையில் வீட்டில் யாராவது பெரியவர் இறந்து போனால், முப்பதாவது நாள் காரியத்தை கடைபிடிப்பது வழக்கம்.
அந்த அடிப்படையில் கருணாநிதி மறைந்த முப்பதாவது நாளில் அமைதிப் பேரணி நடத்த முடிவு செய்தார் அழகிரி.
‘மீண்டும் தி.மு.கவில் இணைந்து செயல்பட வேண்டும்’ என்பதுதான் அவரது நோக்கம். ஆனால்,
இதுகுறித்து ஸ்டாலின் தரப்பில் இருந்து எந்தப் பதிலும் சொல்லப்படவில்லை. ஒருகட்டத்தில், ‘கருணாநிதி இருக்கும்போதே பதவிக்கு ஆசைப்படாதவன் நான்.
கட்சியில் சேர்த்துக் கொண்டால், ஸ்டாலினைத் தலைவராக ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்’ என ஒருபடி கீழிறங்கி வந்து பேசினார்.
அப்போதும் அறிவாலயத்தில் இருந்து எந்தப் பதிலும் வரவில்லை. இதனால் ஆத்திரப்பட்டவர், ‘நாம் யார் என்பதைக் காட்டியாக வேண்டும்.
50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் பேர் வரையில் பேரணியில் திரள வேண்டும்’ என உத்தரவிட்டார். மாவட்டத்துக்கு 50 வாகனங்கள்; தலைக்கு 500 ரூபாய் என பத்து நாள்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டது.
சென்னைக்கு அருகில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்களை அழைத்து வருவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால், எங்கள் திட்டப்படி பெரிதாக எதுவும் நடக்கவில்லை” என ஆதங்கத்துடன் விவரித்தவர்,
“சென்னையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு நேற்றே வந்துவிட்டார் அழகிரி. இன்று காலை 7 மணியில் இருந்தே பேரணிக்கான ஏற்பாடுகள் குறித்து விசாரித்தபடியே இருந்தார்.
‘வெயில் தொடங்குவதற்குள் பேரணியை ஆரம்பித்துவிட வேண்டும்’ என நினைத்தார். ஆனால், நேரம் செல்லச் செல்ல கூட்டம் கூடவில்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துவிட்டார்.
‘கூட்டம் வந்துவிட்டதா?’ என அவர் விசாரித்தபோது, ‘ செங்கல்பட்டு ஏரியாவில் 50 வண்டிகள் நின்று கொண்டிருக்கிறது.
மற்ற வண்டிகள் டோல்கேட்டைத் தாண்டிவிட்டன. இதோ வந்துவிடுவார்கள்’ என ஆதரவாளர் ஒருவர் கூறியுள்ளனர். ஒருகட்டத்தில் பொறுமையிழந்து கத்தத் தொடங்கிவிட்டார்.
பின்னர், இருக்கும் கூட்டத்தை வைத்து 11.15 மணிக்குத்தான் பேரணியைத் தொடங்கினார்.
இதே கோபத்தில், கூட்டத்தில் ஆதரவாளர்களை அவர் அடிக்கும் காட்சிகளும் வெளியானது.
பேரணி முடியும் தருணத்தில், அறிவாலயத்துக்குக் கெடு விதிக்கும் வகையில் பேசுவதற்கு அவர் திட்டமிட்டிருந்தார்.
கூட்டம் கூடாததால், ‘எதுவும் பேச வேண்டாம்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார். பேரணி ஏற்பாடுகளில் இன்னும் கூடுதல் கவனம் எடுத்திருக்கலாம்.
சொல்லப் போனால், ‘ஒரு லட்சம் பேருக்கும் மேல் திரள்வார்கள்’ எனக்கூறி அழகிரியை ஏமாற்றிவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்” என்றார் விரிவாக.
“அழகிரி குறித்து கழக நிர்வாகிகள் எந்தக் கருத்தையும் பேசக் கூடாது எனக் கண்டிப்புடன் கூறிவிட்டார் ஸ்டாலின்.
கட்சியின் பொருளாளர் ஆன பிறகு இன்று காட்பாடி தொகுதிக்குச் சென்றார் துரைமுருகன். அப்போது அழகிரி குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டபோதும், ‘நோ கமென்ட்ஸ்’ எனக் கூறிவிட்டார்.
அதேபோல், ‘அழகிரி குறித்து எந்தக் கேள்வி வந்தாலும் பதில் அளிக்கக் கூடாது; தொலைக்காட்சி விவாதங்களிலும் பங்கு பெறக் கூடாது’ என உத்தரவிட்டுள்ளார் ஸ்டாலின்.
குறிப்பாக, ஒரு தொலைக்காட்சியைக் குறிப்பிட்டு, ‘அந்தச் சேனலில் இருந்து எந்த விவாதத்துக்கு அழைத்தாலும் செல்ல வேண்டாம்’ எனக் கூறிவிட்டார்.
இதே கட்டுப்பாடுதான் குடும்ப உறுப்பினர்களுக்கும்” என்கிறார் தி.மு.க நிர்வாகி ஒருவர்.