யார் இந்த லூயிஸ் ஷோபியா? - பின்னணி தகவல்
06 Sep,2018
லூயிஸ் ஷோபியா... ஊடகங்களிலும் சமூக வலைதளங்களில் இப்போது இந்தப் பெண்ணின் பெயர்தான் டிரெண்டிங். விமானத்தில், இவர் பா.ஜ.க-வின் தமிழக தலைவர் தமிழிசை செளந்தரராஜனை நோக்கி, ``பாசிச பா.ஜ.க ஒழிக” எனக் கோஷமிட்டதற்காக, கைது செய்யப்பட்டு, தற்போது நிபந்தனையற்ற ஜாமீனில் வெளி வந்திருக்கிறார்.
இவர் கனடாவில் மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தில் (university of montreal), கணிதத்தில் பி.எச்டி பயின்றுவருகிறார். தூத்துக்குடியைச் சேர்ந்த இவர், சமீபத்தில் தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு கலவரம் நடந்தபோது, இந்தக் கலவரத்தின் பின்னணி பற்றியும் வேதாந்தா நிறுவனம் செய்யும் அரசியல் பற்றியும் சமூக வலைதளங்களில் எழுதி வந்தவர். இதைத் தொடர்ந்து, ’தி போலிஸ் ப்ராஜெக்ட்’ (The Polis Project) என்ற இணையதளத்தில், விரிவான பேட்டி ஒன்றையும் அளித்திருக்கிறார். தன் ட்விட்டர் பக்கத்திலும், திருமுருகன் காந்தியின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், சமீபத்தில் எழுத்தாளர்கள் கைது குறித்தும், ஆவணப் பட இயக்குநர் திவ்யா பாரதியின் இயக்கிய ’ஒருத்தரும் வரல’ என்ற ஆவணப் படத்துக்கு ஆதரவு தெரிவித்தும், சமூக ஆர்வலர் வளர்மதியைக் காவல்துறையினர் சித்ரவதை செய்ததைக் கண்டித்தும் எழுதியிருக்கிறார்.
அவரைக் கைது செய்வதற்கு முன்னதாக, ``நான் இப்போது தமிழிசை செளந்தரராஜனுடன் விமானத்தில் இருக்கிறேன். எனக்குப் `பாசிச பா.ஜ.க ஒழிக' என்று கத்த வேண்டும் போல் இருக்கிறது. என்னை விமானத்திலிருந்து இறக்கிவிட்டுவிடுவார்களோ?!”, என்று ட்விட் செய்திருந்தார். இவர் தொடர்ந்து தமிழக அரசியல் மற்றும் சமூக சூழல் குறித்து எழுதி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் கைது நடவடிக்கையை, ஒருபுறம் ஜனநாயகத்தை ஒடுக்கும் செயல் என்றும், மறுபுறம் விமானத்தில் கோஷமிடுவது சட்டப்படி குற்றம் என்றும் விவாதிக்கப்பட்டுவருகிறது.