இந்தியா மீது டிரம்ப் விதித்த 10% வரி செல்லாது: நியூயார்க் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!
08 May,2026
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா உள்பட பல நாடுகளுக்கு விதித்த 10 சதவீத உலகளாவிய இறக்குமதி வரிகள் சட்டவிரோதமானது என்று நியூயார்க்கில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் பின்னடைவை சந்தித்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு பெரிய சட்ட போராட்டத்தை தோல்வியுடன் ட்ரம்ப் நிர்வாகம் எதிர்கொண்டுள்ளது.
சிறு வணிக நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு, 2-1 என்ற பெரும்பான்மை அடிப்படையில் இந்த வரிகள் செல்லாது என்று அறிவித்தது.
1974-ஆம் ஆண்டின் வர்த்தக சட்டத்தின் கீழ் காங்கிரஸால் வழங்கப்பட்ட அதிகாரத்தை ட்ரம்ப் தவறாக பயன்படுத்தியதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. முன்னதாக, அமெரிக்காவின் வர்த்தக பற்றாக்குறையை 'தேசிய அவசரநிலை' என்று அறிவித்து கடந்த ஆண்டு ட்ரம்ப் விதித்த வரிகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருந்தது.
அதற்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட இந்த புதிய 10 சதவீத வரிகளும் இப்போது சட்டத்திற்கு புறம்பானது என நீதிமன்றத்தால் முத்திரையிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பு சட்டத்தின்படி வரி விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது என்றும், அதிபர் தனது வரம்பை மீறியுள்ளதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு சிறு வணிகர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ள அதே வேளையில், ட்ரம்ப் நிர்வாகம் இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.