பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தில் 8 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து?
03 Apr,2025
பிரதமர் மோடி இலங்கை செல்லும் போது கச்சத்தீவு விவகாரத்தில் பாக் ஜலசந்தி ஆணையம் அமைக்க வாய்ப்பு உள்ளது. 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் ரயில் பாலம் திறக்கப்பட உள்ளது.
பிரதமர் மோடி இலங்கை செல்லும்போது கச்சத்தீவு விவகாரத்தில் பாக் ஜலசந்தி ஆணையம் அமைக்கப்பட வாய்ப்பு இருப்பதாக நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு பிரத்யேக தகவல்கள் கிடைத்துள்ளன.
ஏப்ரல் 6 ஆம் தேதி இலங்கை அரசு முறைப் பயணத்தில் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க உடன் பிரதமர் மோடி ஆலோசிக்கவுள்ள நிலையில் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. அதன்படி, திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துவது தொடர்பான முத்தரப்பு ஒப்பந்தம், பாதுகாப்புத் துறையில் பயிற்சித் திட்டங்கள் மற்றும் சில உபகரணங்களைப் பெறுவது தொடர்பான ஒப்பந்தம், சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பு, கிழக்கு மாகாணத்தில் மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் கடன் மறுசீரமைப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.
இதனிடையே, மீனவர்கள் பிரச்சனையின் முக்கிய அம்சங்களை இரு தரப்பும் விரிவாக ஆலோசிக்க உள்ளதாகவும், கச்சத்தீவு விவகாரத்தில் பாக் ஜலசந்தி ஆணையம் அமைக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், கச்சத்தீவு பற்றி மோடி வருகையின்போது ராஜாங்க ரீதியிலான பேச்சுவார்த்தை இல்லையென தெரிவித்துள்ள இலங்கை வெளியுறவுத் துறை,
கச்சத்தீவு மீதான உரிமையை இலங்கை ஒருபோதும் விட்டுத்தராது எனவும், ஆனால், ராஜாங்க ரீதியில் இருநாடுகளுக்கும் பொதுவான பயன்பாட்டிற்காக இலங்கை ஒருபோதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே ராமமேஸ்வரத்தில் ரூ 550 கோடி செலவில் புதிய பாம்பன் ரயில் பாலம் கட்டப்பட்டுள்ளது. வரும் 6-ம் தேதி பிரதமர் மோடி இந்த புதிய பாலத்தில் ரயில் சேவையினை துவக்கி வைக்க உள்ளார். இவ்விழாவில் பங்கேற்பதற்காக இலங்கையில் இருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் நேரடியாக மண்டபம் முகாமிற்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.இதற்கென இலங்கை அனுராதபுரத்திற்கு இந்திய விமானப்படையை சேர்ந்த 4 ஹெலிகாப்டர்கள் சென்றுள்ளன என்பது குறிப்பிடதக்கது.