விகடன் இணையதள முடக்கத்தை நீக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!
                  
                     07 Mar,2025
                  
                  
                     
					  
                     
						
	 
	 
	ஆனந்த விகடனின் இணையதள பக்கம் முடக்கப்பட்டதை நீக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 6) உத்தரவிட்டுள்ளது.
	 
	அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அருகில் பிரதமர் மோடி சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருப்பது போன்ற கார்ட்டூன் ஆனந்த விகடனின் இணைய இதழான விகடன் பிளஸ் இதழில் வெளியானது.
	 
	இந்த கார்ட்டூன் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய தகவல் ஒளிபரப்புத்துறைக்கு அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி விகடனின் இணையதளம் முடக்கப்பட்டது.
	 
	இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விகடன் நிறுவனம் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவர்த்தி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது.
	 
	ஆனந்த விகடன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயணன், “கார்ட்டூன் வெளியிட்டதற்காக இணையதளத்தை முடக்குவது என்பது ஊடக சுதந்திரத்தை பறிக்கும் செயல்” என்று வாதிட்டார்.
	 
	இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி பரதசக்கரவர்த்தி, ஆனந்த விகடன் இணையதள பக்கம் முடக்கப்பட்டதை நீக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டார். மேலும், சம்பந்தப்பட்ட கார்ட்டூனை பிளாக் செய்ய வேண்டும் என்று ஆனந்த விகடனுக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.