ஐக்கிய அமீரகத்தில் தூக்கிலிடப்பட்ட இந்திய பெண்! 4 வயது குழந்தையை கொன்ற வழக்கில்
04 Mar,2025
ஐக்கிய அமீரகத்தில் வேலை செய்து வந்த இந்தியப் பெண் ஒருவர் கொலை குற்றச்சாட்டில் தூக்கிலிடப்பட்டுள்ளார். 4 வயது குழந்தையைக் கொன்றதாக அந்த பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தன்னை மிரட்டி ஒப்புதல் வாக்குமூலம் பெற்றதாக அந்த பெண் வாதங்களை முன்வைத்த போதிலும், அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது குறிப்பிடத்தக்கது. இந்தியர்கள் பலரும் வேலைக்காக வெளிநாடுகளுக்குச் செல்வது வழக்கம்.
அதிலும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு அதிகப்படியான இந்தியர்கள் வேலைக்காகச் செல்கிறார்கள். அப்படி ஐக்கிய அமீரகத்தில் வேலைக்காகச் சென்ற பெண் ஒருவருக்கு அங்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் அந்த பெண்ணுக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு இருந்தது. தூக்கு தண்டனை ஐக்கிய அமீரகத்தில் மரண தண்டனையை எதிர்கொண்டிருந்த ஷாஜாதி கான் என்ற அந்த இந்தியப் பெண் தூக்கிலிடப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான ஷாஜாதி கான், 4 மாத குழந்தையைக் கொன்ற குற்றச்சாட்டில் அபுதாபியில் மரணதண்டனையை எதிர்கொண்டிருந்தார்.
அவர் கடந்த பிப்ரவரி 15ம் தேதி ஐக்கிய அமீரக விதிகளின்படி தூக்கிலிடப்பட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய அமீரகம் ஷாஜாதி கானுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறித்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி ஐக்கிய அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அதிகாரப்பூர்வ தகவல் கிடைத்ததாகவும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சேதன் சர்மா டெல்லி ஐகோர்ட்டில் தெரிவித்தார். மார்ச் 5ம் தேதி ஷாஜாதி கான் உடல் தகனம் செய்யப்படும் என்றும் குடும்பத்தினருக்கு அரசு தேவையான உதவிகளை வழங்கி வருவதாகவும் சேதன் சர்மா குறிப்பிட்டார்.
ஷாஜாதி கான் கைதை தொடர்ந்து அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து தெளிவான தகவல் தெரியாத நிலையில், அவரது தந்தை ஷபீர் கான் இது தொடர்பாக டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கின் விசாரணையிலேயே மத்திய அரசு இந்த தகவல்களைத் தெரிவித்தது. இதையடுத்து அந்த பெண்ணுக்கு நடந்தது துரதிர்ஷ்டவசமானது எனக் கூறி டெல்லி ஐகோர்ட் நீதிபதிகள் அந்த மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
வழக்கின் பின்னணி ஷாஜாதி கான் அபுதாபியில் வேலை செய்து வந்தார். அப்போது அவர் ஒரு குழந்தையைக் கவனித்து வந்த நிலையில், அந்த குழந்தை 2022 டிசம்பர் மாதம் எதிர்பாராத விதமாக உயிரிழந்தது. அந்த குழந்தை உயிரிழக்க ஷாஜாதி கான் காரணம் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது. கடந்த 2023 டிசம்பரில் அந்த குழந்தையை உயிரிழக்க தான் தான் காரணம் என ஷாஜாதி கான் கூறும் வகையில் வீடியோ வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது.. மிரட்டிப் பெறப்பட்ட வாக்குமூலம் இருப்பினும்,
ஷாஜாதி கான் வேலை செய்து வந்த வீட்டினர் அவரை மிரட்டி அடித்து சித்திரவதை செய்து அந்த வீடியோவை ரெக்கார்ட் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், குழந்தையின் பெற்றோரும் கூட பிரேதப் பரிசோதனை நடத்தச் சம்மதிக்கவில்லை. மேலும், குழந்தையின் மரணம் குறித்த விசாரணைக்கும் மறுத்துவிட்டனர். ஷாஜாதி கான் தான் தங்கள் குழந்தை உயிரிழக்கக் காரணம் என அவர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். கடந்தாண்டு பிப்ரவரி மாதம் அந்த பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், பெண்ணின் தந்தை கடந்தாண்டு மே மாதம் கருணை மனு தாக்கல் செய்தார். அந்த கருணை மனுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், அந்த பெண் தூக்கிலிடப்பட்டிருக்கிறார்.