அமலாக்கத்துறை அதிரடியில் ரூ.37 கோடி பறிமுதல்
24 Jun,2024
நாட்டை உலுக்கிய எம்எல்எம் மோசடி திட்டம் ஒன்றுடன் தொடர்புடையவர்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கையில் அமலாக்கத்துறை ரூ.37 கோடியை கைப்பற்றி உள்ளது.
பொன்ஸி எனப்படும் எம்எல்எம் திட்டங்கள், நாட்டில் பலவகையாக நடைபெற்று வருகின்றன. அரசு சார்பில் எத்தனையோ விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும், மோசடிகள் தொடரவே செய்கின்றன. அப்படியான மோசடி திட்டம் ஒன்றில் மும்பையை சேர்ந்த நிதி ஆலோசகர் மற்றும் அவரது நிறுவனத்திற்கு எதிராக, ரூ600 கோடிக்கு முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக புகார் எழுந்துள்ளது. இந்த பணமோசடிக்கு எதிரான விசாரணையின் ஒரு பகுதியாக, சுமார் ரூ37 கோடி மதிப்பிலான ரொக்கம், வங்கி மற்றும் டிமேட் கணக்கு வைப்புகளை அமலாக்கத்துறை தற்போது கைப்பற்றி உள்ளது.
அம்பர் தலால் மற்றும் அவரது நிறுவனமான ரிட்ஸ் கன்சல்டன்சி சர்வீசஸ் ஆகியவற்றுக்கு எதிராக ஜூன் 21 அன்று மும்பை பெருநகரத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அமலாக்கத்துறை இன்று தெரிவித்துள்ளது. அதிக வருமானம் தருவதாக உறுதியளிக்கும் பொன்ஸி திட்டத்துக்காக 1300க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து, ரூ600 கோடி பணம் திரட்டப்பட்டதாகவும், பின்னர் அவற்றிலிருந்து தனிப்பட்ட வகையில் கையாடல் செய்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
தங்கம், வெள்ளி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, துத்தநாகம், ஈயம், நிக்கல், தாமிரம், அலுமினியம் ஆகியவற்றின் மீதான சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் முதலீடுகள் திரட்டப்பட்டன. மூலதனம் பாதுகாப்பானதாக இருக்கும் என்றும், அதிலிருந்து ஆண்டு வருமானம் தரப்படும் எனவும் முதலீட்டாளர்களுக்கு உறுதிமொழி அளிக்கப்பட்டது. இந்த வகையில் புதிதாக சேரும் முதலீட்டாளர்களின் முதலீடு, பழைய முதலீட்டாளர்களுக்கு பிரித்து தரப்பட்டது.
இந்த வகையில் முதலீடுகள் சேரச்சேர எம்எல்எம் அடிப்படையில் அவை கிளைகிளையாக பிரித்து பங்கீடு செய்யப்பட்டன. இந்தியாவில் மட்டுமன்றி வளைகுடா தேசங்கள் உட்பட இந்தியாவுக்கு வெளியில் இருந்தும் முதலீடுகள் திரட்டப்பட்டன. அவர்களை சேர்த்தவர்களுக்கான பங்கு பணம் ஹவாலா வாயிலாக திருப்பி தரப்பட்டிருக்கிறது. இதன் மறுபக்கத்தில் நிறுவனத்துக்காக திரட்டப்பட்ட தொகையை தனது தனிப்பட்ட தேவைகளுக்காக அம்பர் தலால் பயன்படுத்த ஆரம்பித்தார். தனது குடும்ப உறுப்பினர்களின் பெயரில் இந்தியாவிலும், வெளிநாட்டிலுமாக ரூ.51 கோடிக்கு அவர் கையாடல் செய்திருக்கிறார். இந்த வகையிலான அசையா சொத்துக்கள் பலவற்றையும் அமலாக்கத்துறை தற்போது அடையாளம் கண்டுள்ளது.