இந்தியாவின் மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக நரேந்திர மோடி இன்று (09) பதவியேற்கவுள்ளார்.
இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவுக்கு பின்னர் அந்நாட்டின் மூன்றாவது முறையாக பதவியேற்கும் பிரதமராக நரேந்திர மோடி காணப்படுகின்றார
இதனிடையே, மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்கவும் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மூன்றாவது முறையாக இந்திய பிரதமராக தனது 73 ஆவது வயதில், நரேந்திர மோடி இன்று இரவு இலங்கை நேரப்படி 7.15 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் பதவியேற்கவுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி மாளிகை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், இதன்போது, மத்திய அமைச்சர் குழுவின் ஏனைய உறுப்பினர்களுக்கும் பதவிப்பிரமாணம் இடம்பெறவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்கவுள்ள நிகழ்வுக்கு 7 நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில், இலங்கை ஜனாதிபதி, பங்களாதேஷ் பிரதமர், மாலைத்தீவு ஜனாதிபதி, மொரிஸியஸ் பிரதமர்த், சீஷெல்ஸ் துணை ஜனாதிபதி, நேபாள பிரதமர், பூட்டான் பிரதமர் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நரேந்திர மோடியினால் தனிப்பட்ட ரீதியில் இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ள தலைவர்களுக்கு, ராஷ்டிரபதி பவனில் ஜனாதிபதி திரௌபதி முர்முவால் நாளை விருந்துபசாரமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அரசியல் பிரமுகர்கள், கலைஞர்கள், பிரபலங்கள் உள்ளிட்ட 8000ற்க்கும் அதிகளவானோர் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் பதவியேற்பு விழாவுக்கு வரும் உலகத் தலைவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களில் இருந்து விழா நடைபெறும் ஜனாதிபதி மாளிகைக்கு வர பிரத்தியேக வழித்தடம் அமைக்கப்படுவதாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா முதல் சிறப்பு விருந்தினராக புது டெல்லியை நேற்று சென்றடைந்தார்.
டெல்லி விமான நிலையத்தில் அவரை வெளியுறவுத்துறை செயலாளர் முக்தேஷ் பர்தேசி வரவேற்றார்.
இதேவேளை, இந்திய பிரதமர் மற்றும் அமைச்சரவை பதவியேற்பை அடிப்படையாகக் கொண்டு டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகையை அண்மித்த பகுதிகளில் ட்ரோன்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.