1 லட்சம் கிலோ தங்கம்.... இங்கிலாந்திலிருந்து இந்தியாக்கு மாற்றிய ரிசர்வ் வங்கி!
31 May,2024
இங்கிலாந்தின் வங்கி இருப்பிலிருந்து இந்தியாவினுடைய 1 லட்சம் கிலோகிராம் தங்கம் அண்மையில் சத்தமின்றி இந்தியாவின் பெட்டகங்களுக்கு ரிசர்வ் வங்கி சேர்த்துள்ளது.
பாங்க் ஆஃப் இங்கிலாந்தின் பெட்டகத்தை ஆக்கிரமித்திருக்கும் இந்தியாவின் தங்கத்திலிருந்து 100 டன் அதாவது 1 லட்சம் கிகி தங்கம், பத்திரமாகவும் ரகசியமாகவும் அண்மையில் இந்தியாவின் பெட்டகங்களுக்கு வந்து சேர்ந்தது. 1991-ம் ஆண்டுக்குப் பின்னர் இப்போதுதான் அதிகளவிலான தங்கம் இந்தியா வந்துள்ளது. மேலும் இந்தியாவின் பெட்டகத்துக்கு வந்து சேர்ந்த தங்கத்தின் அளவிலும் இது மிகவும் அதிகமாகும்.
இந்தியாவின் தங்க இருப்பில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இந்தியாவில் உள்ளது. இதர 2 பங்குகளும் பாங்க் ஆஃப் இங்கிலாந்து உட்பட பல்வேறு பெட்டகங்களில் பாதுகாப்பாக உள்ளது. சுதந்திரத்துக்கு முன்பிருந்து இந்தியா உட்பட பல்வேறு நாடுகளின் தங்கத்தின் இருப்பு, இங்கிலாந்து வங்கியில் பத்திரமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த நாடுகளில் பலவும் இங்கிலாந்தின் முன்னாள் காலனி நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாட்டு வங்கியில் பராமரிக்கப்படும் பெட்டக செலவு மற்றும் பல்வேறு வெளியிடப்படாத காரணங்களால், இந்தியாவின் தங்கம் இருப்பில் கணிசமாக இந்தியாவுக்கு கொண்டு வர முடிவானது. அதன்படி தனி விமானம் மற்றும் உச்சக்கட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் உதவியால் 100 லட்சம் கிகி தங்கம் இந்தியா வந்தடைந்தது. தற்போது மும்பையின் மின்ட் சாலையில் உள்ள ரிசர்வ் வங்கியின் பழைய அலுவலக கட்டிடத்திலும், நாக்பூரில் உள்ள பெட்டகங்களிலும் இந்த தங்கம் பத்திரப்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தரவுகளின்படி, ரிசர்வ் வங்கி 822.1 டன் தங்கத்தை தனது இருப்பில் வைத்துள்ளது. இதற்கு அப்பால் சர்வதேச சந்தையில் கடந்த ஆண்டுகளில் ரிசர்வ் வங்கி தொடர்ந்து கொள்முதல் செய்தும் வருகிறது.
கடந்த நிதியாண்டில் மட்டும் 27.5 டன்கள் சேர்த்துள்ளது. இந்தியாவில் 1991-ம் ஆண்டின் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் முதல் பெரிய அளவிலான தங்கம் பரிமாற்றம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.