தாய், மனைவி, 3 குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை!
11 May,2024
உத்தரப் பிரதேச மாநிலம், சீதாபூரில் மன நலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், இன்று காலை தனது மனைவி, தாய் மற்றும் மூன்று குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் இருந்து 90 கி.மீ. தொலைவில் உள்ளது சீதாபூர். இதன் அருகே ராம்பூர் மதுரா, பல்ஹாபூர் கிராமத்தில் வசித்து வந்தவர் அனுராக் சிங் (42). இவர் குடி போதைக்கு அடிமையாகி, மன நலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவரை போதை மீட்பு மையத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதன் காரணமாக அனுராக் சிங் குடும்பத்தினருடன் சண்டையிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த அனுராக் சிங், தனது தாய் சாவித்ரியை (65) சுட்டுக் கொன்றார். பின்னர், மனைவி பிரியங்காவை (40) சுத்தியலால் தாக்கி கொன்றார்.
தொடர்ந்து ஆத்திரம் குறையாத அனுராக் தனது 12, 9 மற்றும் 6 வயதுடைய மூன்று குழந்தைகளை வீட்டின் மாடியிலிருந்து கீழே வீசி கொன்றார். அதன் பின்னர் அனுராக் சிங் தன்னை தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
அடுத்தடுத்து நடந்த இந்த கொலை, தற்கொலை சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் அனுராக் சிங் வீட்டு முன்பு ஏராளமான மக்கள் திரண்டனர்.
தகவலறிந்த பல்ஹாபூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.