ஈரான் இந்தியா சட்டவிரோத வர்த்தகம்,இந்திய நிறுவனங்கள் மீது அமெரிக்காவின் அதிரடிதடை
26 Apr,2024
ஈரானுடன் சட்டவிரோத வர்த்தகம் செய்ததற்காக 3 இந்திய நிறுவனங்கள் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தடை உத்தரவு நேற்று (25) விதிக்கப்பட்டுள்ளது.
Zen Shipping, Port India Private Limited மற்றும் Sea Art Ship Management (OPC) Private Limited ஆகிய இந்திய நிறுவனங்கள் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஈரானிய இராணுவத்தின் சார்பாக சட்டவிரோத வர்த்தகம் செய்ததாகவும் மற்றும் ஆளில்லா வான்வழி (UAV) பரிமாற்றத்தை எளிதாக்கியதற்காகவும் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைத் தவிர, பல நாடுகளின் நிறுவனங்கள், மக்கள் மற்றும் கப்பல்களுக்கு இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவை அனைத்தும் ஈரானிய ஆளில்லா விமானங்களை ரஷ்யாவிற்கு ரகசியமாக வழங்குவதில் முக்கிய பங்கு வகிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
எனினும் இந்த ஆளில்லா விமானங்கள் உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்படுகின்றன எனவும் ஈரானின் நிறுவனமான Sahara Thunder மற்ற நாடுகளில் அதன் வணிக நடவடிக்கைகளுக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது எனவும் அமெரிக்க தரப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
இது ஈரான் இராணுவத்தின் கீழ் செயல்படுகின்றதாக கூறப்படுகின்றது.
அத்தோடு சஹாரா தண்டர் ஈரானிய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ஈரானிய பொருட்களை விற்பனை செய்தல் மற்றும் ஏற்றுமதி செய்வதைக் கையாள்கிறது.
மேலும் ரஷ்யாவைத் தவிர, இந்த ஏற்றுமதி சீனா மற்றும் வெனிசுலாவிற்கும் வழங்கப்படுகின்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.