ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட அதிக அளவில் விண்ணப்பங்கள் வந்திருந்தால், குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பள்ளிகளுக்கு கல்வித்துறையின் அதிரடி உத்தரவு
தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீட்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில், கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் கீழ், 25 சதவிகித இடஒதுக்கீட்டில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதில், சேரும் நலிவடைந்த மாணவர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் கல்விக் கட்டணம் செலுத்தப்படும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் அரசால் ரூ.400 கோடி தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 2024-25 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
எல்கேஜி வகுப்பில் சேர்வதற்கு குழந்தைகள் 2020 ஆகஸ்ட் 1 ம் தேதி முதல், 2021 ஜூலை 31ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.
முதல் வகுப்பில் சேர உள்ள குழந்தைகள் 2018 ஆகஸ்ட் 1ம் தேதி முதல், 2019 ஜூலை 31ம் தேதிக்குள் பிறந்திருக்க வேண்டும்.
பெற்றோர்கள் தங்களின் வீடுகளில் இருந்து 1 கிலோ மீட்டருக்கு உட்பட்டு அமைந்திருக்கக் கூடிய தனியார் பள்ளிகளுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக உள்ள குழந்தைகள், வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பது எப்படி?
அதன்படி https://rte.tnschools.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக அடுத்த மாதம் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப்பதிவு வெற்றிகரமாக முடிந்ததும், பதிவேற்றம் செய்யப்பட்ட விவரம், பெற்றோரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்கள் வட்டார வள மைய அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் எனவும் தகுதியான விண்ணப்பம் ஏற்கப்பட்ட விபரத்தையும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்காக விபரத்தையும் மே 27ம் தேதி இணையதளத்தில் வெளியிட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட 25 சதவீத ஒதுக்கீட்டிற்கு அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் குலுக்கல் முறையில் செய்யப்படுவார்கள். அதன்படி மே 28ம் தேதி குலுக்கல் நடத்தி குழந்தைகள் தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.