சத்தீஸ்கரில் முக்கிய தளபதி உட்பட 29 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை
16 Apr,2024
சத்தீஸ்கர் காங்கர் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் மாவோயிஸ்டுகளுக்கு இடையே நடந்த தாக்குதலில், 29 மாவோயிஸ்டுகள் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் வரும் 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கர் மாவட்டம் அருகே பஸ்தரில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் முக்கிய தளபதி உட்பட 29 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
சோட்டபெட்டிய காவல் நிலையத்திற்கு உட்பட்ட பினகுண்டா பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் மற்றும் மாவட்ட ரிசர்வ் காவலர்கள் இணைந்து மாவோயிஸ்டுகள் எதிரான தேடுதல் வேட்டையில் இறங்கினர். இந்நிலையில் காட்டுபகுதியில் மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். அதற்கு பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர்.
இதில் மாவோயிஸ்டுகளின் முக்கிய தலைவர் உட்பட 29 பேர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் 3 வீரர்கள் மீது குண்டு பாய்ந்து பலத்த காயம் அடைந்துள்ளனர். மாவோயிஸ்டுகளிடம் இருந்து ஏழு ஏகே சீரிஸ் தூப்பாக்கிகள், 3 எடை குறைந்த மிஷின் தூப்பாக்கிகள் மற்றும் வெடி பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.