சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து... தமிழகத்தை சேர்ந்த 4 பேர் பலி; 13 பேர் படுகாயம்!
20 Mar,2024
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் சுற்றுலா வேன் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்தனர்.
திருநெல்வேலியை சேர்ந்த ஒரு பிரஷர் குக்கர் நிறுவனம் தனது ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சுற்றுலா ஏற்பாடு செய்தது. அதன்படி ஒரு வேனில் சுமார் 15-க்கும் மேற்பட்டோர் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.
இவர்கள் கேரளாவின் மூணாறு மற்றும் ஆனக்குளம் ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பின்னர், ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். நேற்று மாலை இவர்கள் இடுக்கி மாவட்டம் மாங்குளம் பகுதியில் வந்தபோது சாலையோரம் இருந்த 30 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஒரு வயது குழந்தை உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு, அடிமலி தாலுகா மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
விபத்து குறித்து தகவலறிந்த இடுக்கி மாவட்ட போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். போலீஸ் விசாரணையில், உயிரிழந்தவர்கள் அபினேஷ் மூர்த்தி (40), அவரது ஒரு வயது மகன் தன்விக், தேனியைச் சேர்ந்த குணசேந்திரன் (71), ஈரோட்டைச் சேர்ந்த பி.கே.சேது என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.