எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தின் 22 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.
10 Mar,2024
தங்களின் வாழ்வாதாரத்துக்காக கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை, எல்லை மீறியதாக கூறி இலங்கை கடற்படை தாக்குவதும், படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை சேதம் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. இவற்றோடு கணிசமான மீனவர்கள் கைது செய்யப்பட்டும் வருகின்றனர்.
இந்த வரிசையில் தற்போது இலங்கையின் நெடுந்தீவு மற்றும் பருத்தித்துறைக்கு அருகே மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்ததாக, 22 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். ராமேஸ்வரம் மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த விசைப்படகுகளில் வந்த மீனவர்கள் இவ்வாறு இலங்கை கடற்படையின் கைதுக்கு ஆளாகி உள்ளனர். மேலும் விசைப்படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 22 பேரும் காங்கேசன் துறை கடற்கரை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்கு விசாரணைக்குப் பின்னர் சிறையில் அடைக்கப்பட உள்ளனர். இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது, தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடல் எல்லை விவகாரத்தில் தமிழக மீனவர்கள் அலைக்கழிக்கப்படுவதும், இலங்கை கடற்படையால் தாக்கப்படுவது முதல் கைது நடவடிக்கை வரையிலான அட்டூழியங்கள் தொடர்ந்து வருகின்றன. தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் அவர்களுக்கான தீர்வை எட்டுமாறு மீனவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் கோரி வருகின்றனர்.
இலங்கை கடற்படையின் தொடரும் அட்டூழியங்களில், தமிழக அரசின் அதிகாரபூர்வ தகவலின்படி கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும் 243 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன், 37 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.