ஒரே வருடத்தில் 1.37 கோடி இந்தியர்களுக்கு பாஸ்போர்ட்; கேரளா முதலிடம்... தமிழ்நாட்டின்
25 Feb,2024
கடந்த ஓராண்டில் மட்டும் 1.37 கோடி இந்தியர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது.
2023-ம் ஆண்டில் இந்தியாவில் 1.37 கோடி பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று(பிப்.24) தெரிவித்துள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு சுமார் 37,700 பாஸ்போர்ட்கள் என்றளவில் இவை அமைந்திருக்கின்றன. கேரளா, மகாராஷ்டிரா, உபி, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் இந்த எண்ணிக்கையில் பெரும் பங்களிப்பை தந்துள்ளன.
பாஸ்போர்ட் எண்ணிக்கையில் கேரளா முதலிடம் வகிக்கிறது(15.47 லட்சம்). அடுத்த இடங்களில் மகாராஷ்டிரா(15.10 லட்சம்), உத்தரபிரதேசம்(13.68 லட்சம்), தமிழ்நாடு(11.47 லட்சம்) மற்றும் பஞ்சாப் (11.94 லட்சம்) ஆகியவை வருகின்றன. தமிழ்நாடு 4-வது இடம் பிடித்துள்ளது. மேலும் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட மொத்த பாஸ்போர்ட்களில் கிட்டத்தட்ட பாதியை, இவ்வாறு முதல் 5 மாநிலங்கள் பெற்றுள்ளன.
முன்னதாக 2022-ம் ஆண்டில், நாட்டில் சுமார் 1.17 கோடி பாஸ்போர்ட்டுகள் வழங்கப்பட்ட நிலையில், முந்தைய 2021-ம் ஆண்டில் இது சுமார் 73 லட்சமாக இருந்தது. இந்தியாவில் பாஸ்போர்ட் வழங்குவது அதிகரிப்பதற்கு, அவற்றை எளிதாகப் பெறுவது ஒரு காரணம் என வெளியுறவு அமைச்சகம் தெரிவிக்கிறது. 2015-ம் ஆண்டில், சராசரி பாஸ்போர்ட் வழங்குவதற்கான நேரம் 21 நாட்களாக இருந்தது, தற்போது 6 நாட்களாக குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் 11 லட்சம் பாஸ்போர்ட்கள் இந்தியாவில் வழங்கப்பட்டுள்ளன. ’பாஸ்போர்ட் சட்டம்-1967’ என்பதன் கீழ், சாதாரண, ராஜதந்திர, அதிகாரப்பூர்வ, அவசர சான்றிதழ் மற்றும் அடையாளச் சான்றிதழ் என பலவகையிலான பாஸ்போர்ட்கள் வழங்கப்படுகின்றன. வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் உலகமயமாக்கல் ஆகியவை இந்தியாவில் பாஸ்போர்ட் மற்றும் அது தொடர்பான சேவைகளுக்கு தேவையை அதிகரிக்கச் செய்துள்ளன.