இந்தியா நர்மதா பள்ளத்தாக்கில் டைனோசர் புதைபடிமங்கள்
31 Jan,2024
நர்மதா: உலகிலேயே அதிகளவு குஞ்சு பொரிக்கும் இடமாக நர்மதா பள்ளத்தாக்கில் விளங்கி உள்ளதால், அங்கு டைனோசர் புதைபடிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் செயல்படும் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஹர்ஷா திமான் தலைமையிலான குழு, பிளஸ் ஒன் என்ற அறிவியல் இதழில், இந்தியாவில் டைனோசர் இருந்ததற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளது. 2018ம் ஆண்டு இந்திய புவியியல் ஆய்வு மையம், புதைபடிவ ஆய்வு மற்றும் அகழ்வாராய்ச்சி திட்டத்தை தொடங்கியது.
இந்தத் திட்டத்தின் கீழ், ராஜஸ்தான் ஜெய்சால்மர் பகுதியில் உள்ள ஜுராசிக் பாறைகளை ஆய்வு செய்தபோது ஒரு டைனோசரின் புதைப்படிவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மத்திய பிரதேச மாநிலம் நர்மதா பள்ளத்தாக்கு பகுதியில் டைனோசர் முட்டைகள் கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதி டைனோசர் குஞ்சு பொரிக்கும் இடங்களாக இருந்துள்ளன. இப்பகுதி வெப்பமான மற்றும் ஈரப்பதமான காலநிலையைக் கொண்டிருந்ததால், டைனோசர்கள் உயிர்வாழ்வதற்கு ஏற்ற நீர் ஆதாரங்களும் இருந்துள்ளன.
மத்தியப் பிரதேசத்தில் ஜபல்பூர் மாவட்டம் மற்றும் குஜராத்தில் உள்ள பாலசினோரிலும் இதே போன்ற கண்டுபிடிப்புகள் பதிவாகியுள்ளன. தார் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முட்டைகளின் எண்ணிக்கை அதிர்ச்சியளிக்கிறது. உலகிலேயே அதிக டைனோசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்ட இடமாக மத்தியப் பிரதேசம் உள்ளது. நர்மதா பள்ளத்தாக்கில், நூற்றுக்கணக்கான புதைபடிவ முட்டைகளும், டைட்டானோசர்களின் கூடுகளும், மிகப் பெரிய தாவரவகை டைனோசர்களில் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தார் மாவட்டத்தில் மட்டும் 92 டைனோசர் கூடுகளும், 256 டைனோசர் முட்டைகளும் கண்டறியப்பட்டுள்ளன. இவை 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தையவை.