இலங்கை அகதிகள் முகாம் அருகே நாட்டு வெடிகுண்டுகள் சிக்கியது
31 Jan,2024
பெரம்பலூர் நகரில் புதிய பஸ் நிலையம் எதிரே இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. நேற்று மாலை அகதிகள் முகாமுக்கு வடபுறம் அரசு புறம்போக்கு நிலம் வழியாக சென்ற ஒத்தையடி பாதையில் ஒரு பழைய ஹேண்ட் பேக் கிடந்துள்ளது. இதனை அகதிகள் முகாகை சேர்ந்த சண்முகராஜா மகன் கீர்த்திபன்(31) என்பவர் திறந்து பார்த்தபோது அதில் பேப்பரால் சுற்றப்பட்டு இருந்த 10க்கும் மேற்பட்ட வெடிகுண்டுகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உடனடியாக பெரம்பலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். விரைந்து சென்ற போலீசார் பழைய ஹேண்ட் பேக்கை சோதனை செய்தனர். அது நாட்டு வெடிகுண்டுகள் என தெரியவந்தது.
இதையடுத்து அங்கு வந்த திருச்சி மண்டல வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் செயலிழக்க செய்தல் பிரிவு இன்ஸ்பெக்டர் எட்வர்டு தலைமையிலான குழுவினர் வெடிகுண்டுகளை கைப்பற்றி அரசு அங்கீகரிக்கப்பட்ட வெடிமருந்து கிடங்கிற்கு அதனை பாதுகாப்பாக கொண்டு சென்றனர். இந்த பேக் ஒரு மாதத்திற்கு மேலாக முகாம் பகுதியில் கிடந்தது என்றும் இந்த நாட்டு வெடிகுண்டுகள் புதுச்சேரியில் தயாரிக்கப்பட்டது என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.