ஓடும் ரயிலில் ஆபாச செய்கை.கையும் களவுமாக மடக்கிய போலீஸ்
03 Jan,2024
ஓடும் ரயிலில் உறங்கும் பெண் பயணியின் முகத்தில் ஆபாச செய்கை மேற்கொண்ட 47 வயது நபரை, கையும் களவுமாக போலீஸார் மடக்கி உள்ளனர்.
கேரளத்திலிருந்து கோவா நோக்கி விரைந்த பூர்ணா எக்ஸ்பிரஸ் ரயிலில் இந்த அவல சம்பவம் இன்று அதிகாலை நடந்துள்ளது. விஷூவல் கம்யூனிகேஷன் துறையை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் குறிப்பிட்ட காட்சிகளை படம்பிடிப்பதற்காக, உதவியாளர்கள் இருவருடன் கோவா நோக்கி பயணம் மேற்கொண்டிருந்தார்.
இன்று அதிகாலை அப்பெண் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, சக பயணிகளில் ஒருவரான 47 வயது ஆண், பெண்ணை தவறான நோக்கத்தில் நெருங்கி இருக்கிறார். பின்னர் உறங்கும் பெண் முகத்தை நோக்கி தீவிரமாக சுய மைதுனத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை மேல் வரிசை ஸ்லீப்பரில் இருந்த பயணி ஒருவர் கண்டுள்ளார்.
உடனடியாக ரயில்வே போலீஸாருக்கான அவசர உதவியை அவர் தொடர்பு கொண்டார். இருக்கை எண் உட்பட உட்பட சகல விவரங்களையும் அவர் பகிர்ந்ததில், ரயில்வே பாதுகாப்பில் ரயிலுடன் பயணித்த போலீஸாருக்கு அந்த தகவல்கள் பரிமாறப்பட்டன. இதனால் அடுத்த நிமிடமே சம்பவ இடத்தில் ஆஜரான ரயில்வே போலீஸார், 47 வயது ஆபாச பேர்வழியின் பாலியல் அத்துமீறலை கையும் களவுமாக மடக்கினார்கள்
இது தொடர்பாக கோவாவின் கொங்கன் ரயில்வே காவல்துறையின் இன்ஸ்பெக்டர் சுனில் குட்லர், குற்றச் சம்பவம் மற்றும் கைது விவரங்களை செய்தியாளர்களுக்கு தெரிவித்தார். கர்நாடக மாநிலத்தின் கோகர்ணா ரயில் நிலையம் அருகே ரயில் கடக்கும்போது இந்த சம்பவம் நடந்ததாக அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டுள்ள நபர் கேரளாவின் கண்ணூரில் பணிபுரியும், மகாராஷ்டிராவின் சாங்லியைச் சேர்ந்த தத்தாத்ரே சவான் என்ற விவரத்தையும் அவர் தெரிவித்தார். இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவின் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த இளம்பெண் மிகவும் பயந்து போயிருந்ததாகவும், அத்துமீறல் பேர்வழி கைது செய்யப்பட்டதும் அவர் தைரியத்துடன் பயணத்தை தொடர்ந்ததாகவும் இன்ஸ்பெக்டர் சுனில் குட்லர் தெரிவித்தார்.