சென்னையில் இறந்த குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் வைத்து கொடுத்த அரசு மருத்துவமனை ஊழியர்கள்
12 Dec,2023
“சென்னை: புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த கூலித்தொழில் மசூத் என்பவரின் மனைவி சோனியா என்பவருக்கு கடந்த 5-ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மிச்சாங் புயலால் தேங்கிய மழைநீரில் ஆம்புலன்ஸ் வராததாலும், உரிய மருத்துவ உதவி கிடைக்காததாலும் சௌமியாவுக்கு பெண் குழந்தை இறந்து பிறந்துள்ளது.
“ஆம்புலன்ஸ் வரவழைத்து மனைவியை மருத்துவமனை அழைத்துச் செல்லலாம் என 108க்கு தொடர்ச்சியாக தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். மழை வெள்ளத்தால் தொலைத்தொடர்பு சேவை பாதிக்கப்பட்டு இருந்ததால் சிக்னல் கிடைக்காமல் போனது. வெளியே சென்று வாகனம் தேடிச் சென்றேன் கிடைக்கவில்லை. தண்ணீர் கழுத்தளவிற்கு இருந்ததால் இதனால் வீட்டின் அருகே வசிக்கும் பெண்களை உதவிக்கு அழைத்தேன்,” என்றார்.
அவர்கள் உதவிக்கு வந்தனர் என்றும், குழந்தை இறந்தே பிறந்தது என்றும் அவர் கூறினார். “தொப்புள் கொடி அகற்றப்படாமல் இருந்தால் தாய்க்கும் ஆபத்து என பெண்கள் கூறினர்,” என்றார்.
“இதனால், எனது பகுதியைச் சேர்ந்த இளைஞர்களின் உதவியுடன் ஒரு பலகையை மீன்பாடி வண்டி மீது வைத்து அருகில் இருந்த ஜி-3 அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு கருவிகளும், மருத்துவர்களும் இருந்தும் மின்சாரம் இல்லாததால் சோனியாவுக்கு சிகிச்சை அளிக்க முடியவில்லை.
இதையடுத்து ஆம்புலன்ஸ் கிடைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோனியா அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதையடுத்து இறந்து பிறந்த குழந்தையின் உடல் மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், திரும்ப பெற முயன்ற மசூத்திடம் ஊழியர்கள் குழந்தையின் உடலில் உரிய முறையில் துணி சுற்றாமல் அட்டை பெட்டியில் வைத்து வழங்கியதாகவும், ரூ.2,500 லஞ்சம் கேட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இச்சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில், உயிரிழந்த குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் வைத்து வழங்கிய விவகாரம் தொடர்பாக பிணவறை ஊழியர் பன்னீர்செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து விசாரிப்பதற்கு 3பேராசிரியர்கள் கொண்ட விசாரணை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. “